சுற்றுச்சூழல் மாசுபாடு

#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL  ESSAY



THREATS TO THE ENVIRONMENT(UPSC CSE ENGLISH 2018)

சுற்றுசூழல் அச்சுறுத்தல்கள் 
(UPSC CSE ENGLISH 2018)



கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்  


சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும்.


சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது. தற்பொழுது உலகை அச்சுறுத்தும் பத்து அச்சுறுத்தல்களில் சூழ்நிலை சீர்கேடும் ஒன்று என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. சூழல் மாசானது சில வேதியியல் பதார்த்தங்களாகவோ, அல்லது வெப்பம், ஒளி, ஒலி போன்ற சக்திகளாலானதாகவோ இருக்கலாம். பல்வேறு காரணங்களால் சூழல் மாசடைகின்றது.



மாசடையும் முறைகள்



காற்று மாசடைதல்

பல்வேறு வகையான வேதியியற் பொருட்களும், தூசியும் வளிமண்டலத்துக்கு வெளியேற்றப்படுவதன் மூலம் வளி மாசடைகின்றது. தற்காலப் போக்குவரத்து ஊர்திகளாலும், தொழிற்சாலைகளாலும் வெளிவிடப்படும் கார்பன் மோனாக்சைடு,  குளோரோ புளோரோ கார்பன்கள், நைட்ரசன் ஆக்சைடுகள் என்பன வளி மாசடைதலுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.


நீர் மாசடைதல்

நீர்சூழ்மண்டல சீர்கேடு

தொழிற்சாலைகள், வேளாண் நிலங்கள், வேளாண் பண்ணைகள், நகர்ப்புறக் கழிவுகள் முதலியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் ஆறுகளிலும், வடிகால்களிலும், வேறு நீர்நிலைகளிலும் கலந்துவிடுவதால் நீரின் தரமும், நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் புவியின் நீர்வளங்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும் வளிமண்டலத்தில் கலக்கும் மாசுகள் மழைநீருடன் கலந்து நிலத்தை அடைகின்றன. இவை நீருடன் நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும், ஆறுகள், குளங்கள் முதலியவற்றையும் மாசுபடுத்துகின்றன. எனினும் இவை முன் குறிப்பிட்டவற்றை விட குறைந்தளவிலேயே பாதிப்பைத் தருகின்றன.


மண் மாசடைதல்

மண் சூழ்மண்டல சீர்கேடு



இதற்கும், தொழிற்சாலைக் கழிவுகள் முக்கிய காரணிகளாக இருப்பினும், தற்கால வேளாண்மை முறைகளும் மண்மாசடைதலுக்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றன எனலாம். வேதியியல் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் முதலியவற்றின் அதிகளவிலான பயன்பாட்டினால் மண் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


கதிரியக்கப் பாதிப்பு

அணு மின்சார உற்பத்தி, அணு ஆயுத ஆராய்ச்சிகள், அணு ஆயுத உற்பத்தி போன்ற இருபதாம் நூற்றாண்டு நிகழ்வுகளால் கதிரியக்கக் கழிவுகள் உருவாகி சூழல் மாசடைகிறது.


ஒலிசார் மாசடைதல்

ஒலிசார் மாசடைதல் என்பது சாலைகளில் ஏற்படும் வண்டி ஒலி, வண்டி ஒலிப்பான்களால் ஏற்படும் மிகுதியான ஒலி, வானூர்தியின் ஓசை முதலியவற்றால் ஏற்படுகிறது.


ஒளிசார் மாசடைதல்



ஒளி அத்துமீறுகை, அதிகப்படியான ஒளியூட்டம்,வானியல்சார் குறுக்கீட்டு விளைவு போன்றவை இவ்வகை மாசில் அடங்கும்.


காட்சி மாசடைதல்

இவ்வகை மாசுக்கு, தலைக்கு மேலாகச் செல்லும் மின்கம்பிகள், சாலை ஓரங்களில் வைக்கப்படும் பெரிய விளம்பரப் பலகைகள், பாதிக்கப்பட்ட நிலவடிவங்கள், திறந்த வெளிக் குப்பைக் கிடங்குகள், திடக் கழிவுகள், விண்வெளி சிதைவுக் கூளங்கள் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்.


வெப்பம்சார் மாசடைதல்

வெப்பம்சார் மாசடைதல் என்பது காடுகளை அழித்தல், வண்டிகளிலிருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயு போன்றவற்றால் ஏற்படுகின்றது.


சூழல் மாசடைதலின் விளைவுகள்


மனிதனின் உடல்நலம்




தரமற்ற காற்று, மனிதன் உள்ளிட்ட உயிரினங்களைக் கொல்லக் கூடியது. ஓசோன் மாசு, கீழ்க்காணும் நோய்களை மனிதனில் ஏற்படுத்துகிறது:

மூச்சு நோய்
இதய நோய்
தொண்டை எரிச்சல்
நெஞ்சு வலி
மூக்கடைப்பு

நீர் மாசு, நாள்தோறும் 14,000 இறப்புகளுக்கு காரணமாக உள்ளது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், குடிநீரில் கலப்பதினால் ஏற்படும் மாசுதான் இதற்குக் காரணம். 700 மில்லியன் இந்தியர்கள் தகுந்த கழிப்பறை வசதியின்றி வாழ்கிறார்கள். இந்தியாவில் நாள்தோறும் 1000 குழந்தைகள் வயிற்றுப்போக்கு உடல்நலக்குறைவால் இறக்கிறார்கள். ஏறத்தாழ 500 மில்லியன் சீன மக்கள், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்கு அணுக்கமின்றி உள்ளார்கள்.

காற்று மாசுபடுதல் காரணமாக சீனாவில் ஒவ்வொரு வருடமும் 656,000 பேர், குறித்த காலத்துக்கு முன்பே இறக்கிறார்கள். இந்தியாவில் இந்த நிலை 527,700 பேர் என்பதாக உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் ஆண்டுக்கு 50,000 பேருக்கு மேல் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசினால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் வயதானோர் ஆவர். ஏற்கனவே இதயம் அல்லது நுரையீரல் பாதிக்கப்பட்டோர், கூடுதல் சிரமம் அடைகிறார்கள். சிறுவர்களும், குழந்தைகளும் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.

எண்ணெய்க்கசிவுகள், மனிதனின் தோலில் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகின்றன. கேட்கும் திறன் இழப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் உறக்க இழப்பு போன்றவை இரைச்சல் மாசு உருவாக்கும் நோய்கள் ஆகும்.

நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், குழந்தைகளில் வளர்ச்சிக் குறைபாடுகள் போன்றவைகளுக்கு பாதரசம் காரணமாகிறது.

காரீயம் மற்றும் இன்னபிற கடின உலோகங்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு காரணமாகின்றன.

வேதிப் பொருட்களும் கதிரியக்கப் பொருட்களும் புற்றுநோய், பிறப்புக் கோளாறுகளுக்கு காரணமாகின்றன.


கடல் மாசு:


உயிரினங்களின் தோற்றம் கடல் தான் என்ற ஒரு கூற்று நிலவுகிறது. உலகின் முக்கால் பகுதி நீரால் சூழப்பட்டது. இக்கடலால் நாம் பல வளங்களைப் பெற்று வந்தாலும் இதற்கு ஆபத்தை தொடர்ந்து நாம் விளைவித்தே வருகிறோம். இந்தியாவில் வற்றாமல் ஓடக்கூடிய ஆறுகளான கங்கை, யமுனை, சீலம், ரவி, காசி, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதை, தபதி, காவிரி போன்ற முக்கிய ஆறுகளில் மாசு ஏற்பட்டுள்ளது. பல மாசுகள் அடைந்த சூழலில் செல்லும் இந்த ஆறுகள் இறுதியில் கடலில் கலக்கின்றன.
வீட்டு கழிவுகள், குப்பை கூலங்கள், வேளாண் கழிவுகள், தீங்குயிர் கொல்லிகள், பாதரசம் போன்ற கன உலோகங்கள், பெட்ரோலியக் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகளின் குவிப்பு இவைகளின் கலப்பால் கடல் மிக மோசமான பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்திற்குள்ளாகின்றன. இதனை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வும் கேள்விக்குறியாகிவிடுகிறது.


கதிர்வீச்சின் பாதிப்பு:



புறஊதாக்கதிர்கள், காஸ்மிக் கதிர்கள், நுண் அலை, கட்புலக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சுகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் முக்கிய காரணிகளாகும். இக்கதிர்கள் மனிதர்களின் மரபணுவையே பாதிக்கும் அளவிற்குக் கொடியது. பொதுவாக காஸ்மிக் கதிர்வீச்சைக் காட்டிலும் ஓ கதிர்களிலிருந்து வெளிப்படும் 95மூ கதிர்வீச்சு பெரும் இடராக அமைகிறது. அணுகுண்டு, நைட்ரஜன் குண்டு, அணுக்கரு ஆற்றல் தொழில் நுட்பங்களின் விளைவாகச் சுற்றுச் சூழலைக் கதிர்வீச்சு மாசுபடுத்துகிறது.
கதிர்வீச்சினால் சுரங்கப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இக்கதிரியக்க மாசுபாட்டால் குறைப்பிரசவம், செத்துப் பிறத்தல், பிள்ளைப்பேறு குறைதல், கண்புரை, வாய்ப்புண், இரத்தக் குழாய் பாதிப்பு, சருமத்தில் செம்புள்ளிகள், இரைப்பைக் குடல் பாதிப்பு, ரத்தப் போக்கு, எலும்பு மஜ்ஜை பாதிப்பு வயதுக்குப் பொருந்தாத மூப்பு, ஆயுள் குறைப்பு போன்ற எண்ணற்ற குறைபாடுகளும் அவதிகளும் ஏற்படுகின்றன.


தமிழ் இலக்கியங்களில் சுற்றுச்சூழல் 

வலியுறுத்தல்:


சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நெடுங்காலத்திற்கு முன்பே நம் பண்டைத் தமிழர்கள் சிறந்த முன்னோடிகளாக திகழ்ந்திருந்தனர். தொன்மையான தமிழ்க்குடியினரின் வாழ்வுமுறைகள் பெரும்பாலும் அவரவர் வாழ்விடத்தில் உள்ள நிலங்களையும், செழித்தோங்கிய மரஞ்செடி கொடிகளையும், பிற வனங்களையும் கொண்டே அமைந்திருந்தன.
“இடுமுள் வேலி எடுப்படு வரைப்பின்” (பெரும் -154) – என்ற பாடல் தனியிடங்கள் குப்பைகளை வெளியே போடக்கூடாது. அவற்றுக்கென தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததையும், குப்பைகள் கொட்டப்படும் இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டு இருந்ததையும் அழகாக பெரும் பாணாற்றுப்படையில் கூறியுள்ளனர்.
மக்களின் வாழ்வும், தாழ்வும் ஐம்பூதமான இயற்கையை மையமாகக் கொண்டே அமைந்துள்ளதை நம் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்ததை பின்வரும் புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கிறது.
“மண்டினிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீ முரணிய நீருமென்றாங்கு (புறநானூறு: 2=1.6)
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல
கேடு வராமலும் கேடு வந்தால் அதனைச் சரிசெய்து இயற்கை வளம் குன்றாமல் காத்துக்கொண்டு இருக்கின்ற நாடே நாடுகளுக்கெல்லாம் தலைமையானது  என்கிறார் வள்ளுவர்.
“கேடு அறியாக்கெட்ட இடத்தும் வளம்குன்றா
நாடு என்ப நாட்டின் தலை” – (குறள் – 736) –மேலும் மழை நீர், ஆற்று நீர் போன்றவையும் அலை, அரண் போன்றவையும் நாட்டிற்கு மிக முக்கிய உறுப்புகளாகத் திகழக் கூடியது. ஆகவே இயற்கைப் பாதுகாத்தல் அவசியம் என்கிறார்.
“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு – (குறள் – 737)
-அதே போல எலி, மயில், காளை, யானை, ஆடு, அன்னம், பாம்பு, காகம், கருடன், கிளி, எருமை, கழுதை போன்ற உயிரினங்களை இறைவனோடு தொடர்புபடுத்தி, வாகனங்களாகவும் கருதி வழிபடச் செய்தனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக 1986ல் இயற்றப்பட்டுள்ள சட்டம் இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை சார்ந்த அனைத்தும் குறிப்பாக நிலம், நீர், காற்று ஆகிய காரணிகளுடன் தொடர்புடைய அனைத்துக்கும் இச்சட்டம் பொருந்தும். பொருட்களைத் தயாரித்தல், செயல்படுத்துதல், கையாளுதல், பாதுகாத்தல், பயன்படுத்துதல் போன்ற எல்லாவற்றிற்கும் இச்சட்டம் ஏற்புடையதாகும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இயற்கையைப் பேணிக் காப்பதோடு கற்பித்தல்- கற்றல் இந்த இரண்டு முறைகளிலும் தொலைநோக்கும் பார்வையுடன் செயல்பட்டால் தான் முழுமை பெற முடியும். வருங்காலத் தலைமுறையினர் ஆற்றலோடும், ஆளுமையோடும், உயர்வோடும், உரிமைபோகும், தலைநிமிர்ந்து வாழ வேண்டுமாயின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம். இதனை நடைமுறைப்படுத்தும் கல்வி மிக மிக அவசியம். வருங்காலத் தலைமுறைக்கு கல்வியின் வழிச் சுற்றுச் சூழலை போற்றிப் பேணுவோம்.


சுற்றுப்புறம்

சூழல் மாசடைதல், சுற்றுப்புறத்தில் பரவலாக காணப்படுகிறது. இதனால் 

கீழ்காணும் விளைவுகள் ஏற்படுகின்றன:

பைங்குடில் வளிகளின் மாசு வெளிப்பாடு பல வழிகளில் சூழல் மண்டலங்களைப் பாதிக்கும் புவி வெப்பமடைதலுக்கு வழிவகுக்கிறது.
மண் செழிப்பற்றதாகவும் தாவரங்கள் வளர ஏற்பற்றதாகவும் மாறும். இது உணவுச் சங்கிலியில் உள்ள மற்ற உயிரினங்களைப்பாதிக்கும்.


மாசுக் கட்டுப்பாடு



சுற்றுச்சூழல் மேலாண்மையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியச் சொல், மாசுக் கட்டுப்பாடு ஆகும். மாசு நிறைந்த உமிழ்வுகளும், கழிவுகளும் காற்று, நீர் அல்லது நிலம் போன்றவற்றில் கலப்பதனை கட்டுப்படுத்துதலே மாசுக் கட்டுப்பாடு என வரையறுக்கப்படுகிறது. மாசடைதலை தடுத்தலும், விரயங்களைக் குறைத்தாலும் மாசுக் கட்டுப்பாட்டின் முக்கிய அம்சங்களாகும்.


கட்டுப்பாட்டு முறைகள்


மீண்டும் பயன்படுத்துதல் (3 R)(reusing / recycling)
பயன்பாட்டைக் குறைத்தல் (reducing)
மாசடைதலைத் தடுத்தல் (preventing)
மக்கிய உரங்களை உருவாக்கிப் பயன்படுத்தல் (compost)


மாசுக் கட்டுப்பாடுக் கருவிகள்


தூசு சேகரிப்பு கட்டகம் (Dust collection systems)
பை வீடுகள் (baghouses)
சுழற் பாய்மப்பிரிப்பி (cyclone separator)
நிலைமின் வீழ்படிவாக்கி (electrostatic precipitator)
சுத்தப்படுத்தி (scrubber)
தடு-தகடு தெளிப்பான் (Baffle spray scrubber)
சுழற் தெளிப்பான் (Cyclonic spray scrubber)
குறுவழி வெளிப்போக்கி (Ejector venturi scrubber)
தெளிப்புக் கோபுரம் (Spray tower)
ஈரச் சுத்தப்படுத்தி (Wet scrubber)
கழிவுநீர்த் தரமேற்றம் (Sewage treatment)
வண்டலாக்குதல் - முதல்நிலை தரமேற்றம் (Sedimentation)
கழிவு உயிர்ம-பதனக்கலம் - இரண்டாம் நிலை தரமேற்றம் (Activated sludge biotreaters)
காற்று கலந்த கடற்கரைக் காயல் (Aerated lagoons)
ஆக்கப்பட்ட சதுப்புநிலங்கள் (Constructed wetlands)
தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம் (Industrial wastewater treatment)
எண்ணெய்-நீர் பிரிப்பி
உயிரிய வடிப்பி (Biofilter)
கரைந்த காற்றுமிதப்பு முறை (Dissolved air flotation - DAF)
கிளர்வுற்ற கரிமத் தரமேற்றம் (Powdered activated carbon treatment)
நுண் வடித்தல் (Ultrafiltration)
ஆவி மீட்பக முறை (Vapor recovery system)
தாவரவழி மருந்தூட்டம் (Phytoremediation)

சூழலை மிகவும் மாசுபடுத்தும் தொழில்கள்


பியூர் எர்த் என்னும் இலாப நோக்கற்ற ஒரு பன்னாட்டுத் தொண்டு நிறுவனம் ஆண்டு தோறும் சூழலை மிகவும் மாசுபடுத்தும் தொழில்களின் பட்டியலை வெளியிடுகிறது. 
காரீய அமில மின்கல மறுசுழற்சி
சுரங்கத் தொழில்
காரீயம் உருக்கிப் பிரித்தல்
தோல்த் தொழில்
Artisanal Small-Scale Gold Mining
நகர்ப்புறக் கழிவுகளின் குப்பைக்கிடங்கு (Landfill|)
Industrial Estates
வேதித் தொழில்
உற்பத்தித் துறை
சாயத் தொழில்


பசுமைக்குடில் வளிமங்களும் புவி சூடாதலும்

ஆதாரம்: Energy Information Administration.

கார்பன் டை ஆக்சைடு, தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கைக்கு முக்கியமானது என்றபோதிலும் இந்த வளியின் அளவு கூடும்போது புவியின் தட்பவெப்ப நிலையில் பாதிப்புகள் நிகழ்கின்றன. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடின் கூடிவரும் அளவினால், பெருங்கடல்களின் நீர் அமிலத்தன்மை கூடுகிறது. இதன் காரணமாக கடற்சார் சூழ்மண்டலமும் பாதிக்கப்படுவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இந்தியாவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்



இந்தியாவில் பல சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளன. காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, குப்பை, மற்றும் இயற்கை சூழலுக்கு மாசுபாடு அனைத்தும் இந்தியா எதிர்கொள்ளும் சிக்கல்களாகும். 1947 முதல் 1995 வரை சுற்றுச்சூழல் மோசமாக இருந்தது. தரவு சேகரிப்பு மற்றும் உலக வங்கி நிபுணர்களின் சூழல் மதிப்பீட்டு ஆய்வுகள் படி, 1995 முதல் 2010 வரை இந்தியா அதன் சுற்றுச் சூழல் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் உலகளவில் மிக வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளது.இன்னும், இந்தியா வளர்ந்த நாடுகளில் அனுபவித்து வரும் சுற்றுச்சூழல் தரத்தை எட்ட நீண்ட வழி உள்ளது.
சிலர் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காரணமாக உள்ளது என்றும் வேறுசிலர் பொருளாதார வளர்ச்சி இந்திய சுற்றுச்சூழல் மேலாண்மையை மேம்படுத்தவும் மாசுபாட்டை தடுக்கவும் முக்கியம் என்றும் கருத்து தெருவிக்கின்றனர். இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள் தொகை இந்திய சுற்றுச்சூழல் சீரழிவு முதன்மை காரணம் என்றும் கூறப்படுகிறது. முறையான ஆய்வுகள் இந்த கோட்பாட்டிற்கு எதிராகவுள்ளன.
இந்தியாவில் மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் ஆற்றலுக்காக எரி விறகு, மற்றும் உயிர்த்திரள் (கால்நடையில் இருந்து பெறப்பட்ட உலர்ந்த கழிவுப்பொருட்களை) எரித்தலும், குப்பை மற்றும் கழிவு அகற்றும் சேவைகளில் ஒருங்கிணைப்பு இல்லாதலும் ஆகும்.கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இல்லாதலும், வெள்ள கட்டுப்பாடு மற்றும் மழை நீர் வடிகால் இல்லாதலும் நுகர்வோர் கழிவுகளை முக்கிய ஆறுகளுக்குள் திசை திருப்புவதும் ஆறுகளுக்கு அருகில் தகன நடைமுறைகள் மேற்கொள்ளுவதும், நீர் மாசுபாட்டிற்கு காரணம். அதிக மாசு ஏற்படுத்தும் பழைய பொது போக்குவரத்து, மற்றும் 1950 முதல் 1980க்கு இடையில் கட்டப்பட்ட அரசுக்கு சொந்தமான, உயர் உமிழ்வு தொழிற்சாலைகளினாலும் மாசுபாடு ஏற்படுகிறது.
இந்தியாவில் நீர் மற்றும் சுகாதார பிரச்சினைகள் பல சுற்று சூழல் பிரச்சினைகளுடன் தொடர்புடையன.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நோய்களுக்கு முதன்மை காரணமாவதோடு, சுகாதார பிரச்சினைகள் இந்தியர்களின் நீண்ட ஆயுட்காலத்தை பாதிக்கிறது.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் இந்திய சட்டம்



இந்திய உச்ச நீதிமன்றம் 1980களின் பிற்பகுதியிலிருந்து இந்திய சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் போக்குவதில் கவனம் செலுத்துகிறது.. பெரும்பாலான நாடுகளில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அரசாங்கத்தின் சட்டத்துறை மற்றும் செயற்குழுக்கள் திட்டமிட்டு செயல்படுத்துகின்றன. ஆனால் இந்தியாவின் அனுபவம் வித்தியாசமானது. இந்திய உச்ச நீதிமன்றம் நேரடியாக சுற்றுச்சூழல் சட்டங்களை இயற்றி விளக்கங்கள் அளிப்பதோடு புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. நீதிமன்றம் சூழலை பாதுகாக்க புதிய கொள்கைகள் கொண்டு வந்ததோடு, சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு புதிய விளக்கம் அளித்துள்ளது. புதிய நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கியதோடு, ஏற்கனவே உள்ள அமைப்புகளுக்கு தீர்ப்புகள் மற்றும் தொடர் அறிவுறுத்தல்கள் மூலம் கூடுதல் அதிகாரங்களை வழங்கியது. தனது ஆணையில் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறைகள் மற்றும், நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை வழங்கும். சில விமர்சகர்கள், இந்திய உச்ச நீதிமன்றத்தை பசுமை பென்ச் அல்லது குப்பை மேற்பார்வையாளர்களின் பிரபு என விவரிக்கிறார்கள். ஆதரவாளர்கள் இந்திய உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் புதிய கொள்கைகள் கொண்டு வருவதோடு நீதி வழங்குவதிலும் முன்னோடியாக திகழ்வதாக போற்றுகிறார்கள்.

இந்திய உச்ச நீதிமன்றம் நிர்வாகங்களின் செயற்பாடுகளுக்கு விதிக்கும் தடைகளுக்கான காரணங்கள், சிக்கலானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அரசு நிறுவனங்களும் அரசுக்கு சொந்தமான அமைப்புகளும் தங்கள் சட்டப்படியான கடமைகளை சரிவர செய்யாததே இதற்கு முக்கிய காரணமாகும். இதுவே மக்கள் நலனுக்காக சமூக குழுக்கள் நீதிமன்றங்களில், குறிப்பாக உச்ச நீதிமன்றங்களில் புகார்கள் பதிவு செய்ய தூண்டியிருக்கிறது.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய பொது நலவழக்குகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமின்றி உயர் நீதி மன்றங்களுக்கு சென்றுள்ளன. மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் பதிவாகியுள்ளன.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மீது இந்திய நீதிமன்றத்தின் நடவடிக்கைகளும், ஆலோசனைகளும், இந்தியாவின் அனுபவத்தில் நேர்மறை விளைவுகளையே அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம், தீவிர நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம், இந்திய மக்களின் நம்பிக்கை சின்னமாக மாறியுள்ளது என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். நீதிமன்ற நடவடிக்கை விளைவாக, இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு புதிய ஒழுங்குமுறை மற்றும் உரிமைகளை கொண்டு வந்துள்ளது. இந்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் நியாயமான மற்றும் பொது நலன்கருதி செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது, மீறினால் நீதிமன்றம் தலையீட்டு அந்த செய்கை செல்லுபடியாகாததாக செய்துவிடும்.


தேசிய சுற்றுச்சூழல் கொள்கையின் நோக்கங்கள்






நீடித்து நிலைக்கும் வளர்ச்சியின் மையத்தில் மனித இனம் உள்ளது.

வளர்ச்சியினை எதிர்நோக்கும் உரிமை

வளர்ச்சிப் பணியில் ஒருங்கிணைந்த அம்சமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளது.

விழிப்புடன் கூடிய அணுகுமுறை

பொருளாதாரத் திறன்

சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது,
வனப்பரப்பினை அதிகரித்தல்,
நன்செய் நிலங்களைப் பாதுகாத்தல்,
நிலத்தடி நீர்,
ஆறு மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாத்தல்,
வலுவற்ற சூழல் அமைப்பு மற்றும் கடற்கரைப் பகுதியைப் பாதுகாத்தல்,
உயிரினம் மற்றும் தாவரங்களின் பல்வேறு வகைகளைப் பாதுகாத்தல்,
மக்களின் தவறான நடவடிக்கைகளினால் ஏற்படும் விளைவுகளிலிருந்து மண் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்,
சுற்றுச்சூழலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் திடக்கழிவுகளை மறு சுழற்சி செய்தல்,
வளிச்சூழல் மண்டலத்தின் மாசினைக் குறைத்தல் மற்றும் பொதுவான வகையில் மாநிலம் முழுவதும் சூழ்நிலையியல் மண்டலத்தின் சமன்பாடு நிலையை சீரான வகையில் பராமரித்தல் உள்ளிட்ட மனித சமுதாயச் செயல்பாடுகளின் சுற்றுச்சூழல் தடங்களில் அடங்கும்.

பாதுகாத்தல்


இந்தியாவில் சூழல்தொகுப்பின் பிரச்சினைகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் ஒவ்வொரு அங்கமும் முக்கியமான பகுதியுமாகும். காற்றின் குறைந்த தரம் நீர் மாசுபாடு, மற்றும் குப்பை மாசுபாடு ஆகிய அனைத்தும் சூழல்தொகுப்பிற்கு தேவையான உணவு மற்றும் சுற்றுச்சூழலின் தரத்தை பாதிக்கும்.
இந்தியா ஒரு பெரிய பன்முகப்பட்ட நாடு. அதன் நிலப்பரப்பு மிகவும் வறண்ட பாலைவனங்களையும் உலகின் மிக உயர்ந்த மழை பெய்யும் பகுதிகளையும் கடற்கரை மற்றும் ஆல்பைன் மலை பகுதிகளையும், வெப்ப மண்டல தீவுகளையும் ஆற்றங்கரைகளையும் கொண்டது. இந்தியா மிக அதிகமான காட்டு தாவர வகைகளை கொண்டது. இந்தியா உலகின் பன்னிரண்டாவது உயிரினவளச் செறிவு மிக்க நாடாகும்.
இந்திய காடுகளின் வகைகள் வெப்ப மண்டல பசுமைமாறாக் காடுகள், வெப்ப மண்டல இலையுதிர் காடுகள், தாழ்நிலக் காடுகள், சதுப்புநில காடுகள், துணை வெப்பமண்டல காடுகள், மலை காடுகள், புதர்க் காடுகள், துணை ஊசி இலை மற்றும் ஊசி இலை காடுகள் முதலியனவாகும் . இந்த காடுகள் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை கொண்ட சூழல் தொகுப்பாகும்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு




சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன. 1960 களில் இருந்து, சுற்றுச்சூழல் இயக்கங்களின் செயல்பாடுகள் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மனித நடவடிக்கைகளினால் சுற்றுச்சூழலில் தாக்கம் எந்த அளவிற்கு ஏற்படுகின்றது என்பது தெளிவாக தெரியவில்லை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சில சமயங்களில் கடுமையாக விமர்சிக்கபடுகின்றன.

கல்வி நிறுவனங்கள் இப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள், சுற்றுச்சூழல்கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற படிப்புகளை வழங்குகின்றன. பல்வேறு மனித நடவடிக்கைகளின் காரணமாக சுற்று சூழல் பாதுகாப்பு தேவைப்படுகின்றது. கழிவு உற்பத்தி, காற்று சூழல் மாசடைதல், மற்றும் பல்லுயிர் இழப்பு (நுண்ணுயிரிகளின் மற்றும் உயிரினங்களின் அழிவு) முதலியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளாகும்.

சுற்றுச்சூழல் சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் கல்வி மூன்றும் பின்னிப்பிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழிவகுக்கின்றன. இந்த காரணிகளின் ஒவ்வொன்றும், தேசிய சுற்றுச்சூழல் முடிவுகள் மற்றும் தனிப்பட்ட சுற்றுச்சூழல் நடத்தைகளையும் பாதிக்கின்றன. உண்மையான சுற்றுசுழல் பாதுகாப்புக்கிடைக்க சமுதாயம் ஒன்றுபட்டு சுற்றுசூழலை பற்றிய முடிவுகளை எடுப்பது அவசியமாகின்றது.

சுற்றுச்சூழல் கல்வியின் அவசியமும், அதன் விழுமியச் சிந்தனைகளும் 





இயற்கை – இது நமக்குக் கிடைத்த வரம், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் இயற்கைக்கு மனிதனைப் போன்று சுயநலமில்லை. அனைத்திலும் பொதுநலம் பார்க்கும் இயற்கையானது நமக்கு தூய காற்றையும், நீரையும் வழங்குவதோடு உணவு, உடை, உறைவிடத்திற்குத் தேவையான அத்தனை மூலப்பொருட்களையும் நமக்கு வழங்கி நம்மை வாழ்விக்கிறது. இவ்வாறு நமக்கு உதவி வரும் இயற்கையை நாம் காக்கிறோமா? என்றால் இல்லை.
இந்த விசயத்தில் கல்வி நிறுவனங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் சுற்றுச்சூழல் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறதா? இதனைச் சரியாகக் கற்றுக் கொடுக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். தற்போது கணினியும், ஆடம்பரத்திற்குத் தேவையான உபகரணங்களும் பெருகி உள்ளதால் இதனைப் பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமே என்று எத்தனை பேர் அறிந்து செயல்படுகிறோம் என்று தெரியவில்லை.
இயற்கை அழிந்தும், சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்தும் வருவதால் பாதிக்கப்படுவது நம்மைச் சார்ந்தவர்களும், எதிர்காலச் சந்ததியினருமே.


சுற்றுச்சூழல் கல்வி:



ஐம்பூதங்கள் எனப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவை, உலகின் உயிர்கள் நிலைத்தும், நீடித்தும் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கித் தருகிறது. 19ம் நூற்றாண்டிலும், இதற்குப் பிறகு நடந்த உலகப் போர்கள், தொழிற்புரட்சி, பொருளாதாரத்திலும் இதன் வளர்ச்சியிலும் ஏற்பட்ட பின்னடைவுகள் போன்ற நிகழ்வுகள், உலக நாடுகளை மிகவும் பாதிப்படையச் செய்தது. இதனால் அவர்கள் அனைவரும் காடுகள், கனிம வளங்கள், நீர், நிலம், காற்று என்று இயற்கை வளங்கள் ஒன்றையும் விடாமல் சுரண்டினர்.
இதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நெருக்கடிக்குள்ளாகி உள்ளன. தற்போது அமில மழை, பாலைவனமாதல், உலக வெப்பநிலை மாறுபாடு, ஓசோன் படலம் பாதிப்பு, கதிரியக்கம், உயிர்களின் அழிவு போன்றவை மனிதர்களுக்குப் பெரும் சோதனையாகிவிட்டன. மேற்சொன்ன நிலையை மாற்றவும், ஆய்வுகள் நடத்தி தீர்வு காணவும் எண்ணிய ஐ.நா. சபை 1992-ல் சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டது. இதில் சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவர வேண்டும்’ என்று உறுதி எடுக்கப்பட்டது. இதற்கு “அஜெண்டா-21” என்று பெயரிடப்பட்டது. இதன் மூலம் கல்வி, பொது விழிப்புணர்வுப் பயிற்சி போன்றவை சுற்றுச் சூழலை மேம்படுத்த வேண்டிய காரணிகளாகக் கொள்ள வேண்டும் என்று முடிவானது. மேலும் சுற்றுச்சூழல் கல்வி , கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக்கப்பட்டது.


சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்:


நேற்றைய இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும், இன்றைய இயற்கை அழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கவும், நாளைய அல்லது எதிர்கால உலகில், இயற்கை வளங்களினால் மனித சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளில் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் சமாளிக்கவும், ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் கல்வி தேவைப்படுகிறது. இக்கல்வியின் மூலம் இருக்கும் வளங்களைக் கொண்டு, முன்னேற்றத்திற்கான வழிவகைகளைச் சிந்திப்பதும், அவற்றைச் செயல்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல் கல்வி என இம்மூன்றையும் ஒரே கற்றல் செயலாக இணைப்பதன் மூலம் கல்விப் பணியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இயலும். அன்றாட வாழ்க்கையில் இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்துத் தடத்திலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இம்முறை உதவும் என சுற்றுச்சூழல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை நடைமுறைப்படுத்தும் அம்சங்களையும் கல்வியில் புகுத்தியுள்ளனர். ஆகவேதான் சுற்றுச்சூழல் கல்வி மிகவும் அவசியமாகிறது.



சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணுகுமுறைகள்



சர்வதேச சுற்றுச்சூழல் உடன்படிக்கைகள்

பல நாடுகளில் பூமியின் வளங்கள் மனித தாக்கங்களினால் பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவாக பல அரசாங்கங்கள் இயற்கை வளங்களுக்கு மனித நடவடிக்கைகளினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சேதங்களை தடுக்க, பல நாடுகளுக்கு இடையிலே ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த சர்வதேச சுற்றுச்சூழல் உடன்படிக்கைகள் சில நேரங்களில் சட்ட ரீதியான மற்றும் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட ஆவணங்களாகவும், பிற நேரங்களில் கொள்கைகளாகவும் அல்லது நடத்தை குறியீடுகளாகவும் பயன்படுத்தபடுகின்றன. 




அரசு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் பங்கு, சட்டம் மற்றும் சட்ட அமலாக்கத்தைப் பற்றிய கவனம் செலுத்துகின்றன. எனினும் அந்த பரந்த அடிப்படையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வெறும் அரசாங்கத்தின் பங்கு மட்டுமன்றி அனைத்து மக்களின் பொறுப்பாகின்றது. சுற்றுச்சூழலைப் பற்றிய முடிவுகள் தொழில்துறை நிறுவனங்கள், உள்நாட்டு பழங்குடி மக்கள், சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் உட்பட பல பங்குதாரர்களை உள்ளடக்கியது. பல நாடுகளில் சுற்றுபுற பாதுகாப்பு கூட்டுமுயற்சியாக உருவாகி வருகின்றது.

பல அரசியலமைப்புகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளன. பல சர்வதேச ஒப்பந்தங்கள் ஆரோக்கியமான சூழலில் வாழும் உரிமையை அங்கீகரித்துள்ளன. மேலும், பல நாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவே நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் அர்ப்பணிக்கபட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் போன்ற சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்பாட்டிலுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசாங்க நிறுவனங்களின் பொறுப்பு மட்டும் இல்லை என்றாலும், பெரும்பாலான மக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இந்த நிறுவனங்கள் முதன்மை முக்கியத்துவம் கொண்டதாக கருதுகின்றனர்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள்: சரியாகத்தான் பேசுகிறோமா?



லகில் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் சமீபகாலமாக பெருமளவில் அதிகரித்திருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த போராட்டங்களும் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. சுற்றுச்சூழல், இயற்கை ஆர்வலர்களைத் தாண்டி மக்களும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு எதிராக சமீபத்திய ஆண்டுகளில் போராடத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கை நேரடியாக பாதிக்கப்படவும் வாழ்வாதாரம் பறிக்கப்படவும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதன் வெளிப்பாடு இது.
நிலம், நீர், காற்று, வானம் ஆகியவை எந்த ஒரு மனிதரின் வாழ்க்கைக்கும் அடிப்படையாக இருப்பவை. சுற்றுச்சூழல் சீர்கேட்டால் இந்த நான்கும் ஏதோ ஒரு வகையில் சீர்கெடும்போது, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. தங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் களத்தில் இறங்க ஆரம்பிக்கிறார்கள்.



எஞ்சியதைக் காப்பாற்ற...


நிலம், நீர், காற்று உள்ளிட்ட அனைத்துமே செலவில்லாத இயற்கைச் சொத்தாக, மக்களின் பொதுச் சொத்தாகத் திகழ்கின்றன. ஏற்கெனவே பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளால் அவற்றில் பெருமளவு சுரண்டப்பட்டுவிட்டது. அதைத் தடுப்பதற்கோ பாதுகாப்பதற்கோ அரசு உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. எஞ்சியுள்ள மிகக் குறைந்த இயற்கைச் சொத்தும் பறிபோகக்கூடிய நிலையில் மக்கள் விழித்துக்கொள்கிறார்கள். பழங்குடிகளைத் தாண்டி சமீபகாலத்தில் கிராம, நகர மக்கள் சுற்றுச்சூழல் போராட்டங்களில் களம் காணுவதற்கான அடிப்படை இதுவே.
இந்தப் போராட்டங்கள் நீடிக்கின்றனவா, எப்படி மாறுகின்றன என்பது வாழ்வாதாரம் மீது மக்களுக்கு உள்ள தீவிரப் பிடிப்பையும் அரசு அடக்குமுறையையும் சார்ந்ததாக இருக்கிறது. ஒரு பிரச்சினை சார்ந்த புரிதலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கக் கூடாது என்ற தீர்மான உணர்வும் அறிவியல் அடிப்படையிலும் தர்க்கபூர்வமாகவும் அமையும்போதே மக்களின் பிடிப்பு நீடிக்கும். போராட்டங்களில் பங்கேற்கும் பல்வேறு தரப்பினரின் தாக்குப்பிடிக்கும் தன்மை இந்த அஸ்திவாரத்தின் மீது உறுதியாக எழும். தங்கள் எல்லையைத் தாண்டியும் போராட்டத்துக்கான ஆதரவை மக்கள் விரிப்பதற்கும் இது ஆதாரமாகத் திகழும்.
சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் எதுவானாலும் அறிவியல்பூர்வ அணுகுமுறையுடன் தர்க்கப்பூர்வமாக முன்வைக்கப்படும் வாதமும், அது சார்ந்து மக்களை ஒன்றுதிரட்டுவதும் நாளடைவில் உறுதிப்படும்-சாத்தியப்படும்.



உணர்ச்சிவசப்பட்ட வாதங்கள்


தமிழகத்தில் சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சுற்றுச்சூழல் போராட்டங்கள் சார்ந்த வாதப் பிரதிவாதங்களும் பார்வைகளும், அறிவியல்பூர்வமாகவும் தர்க்கபூர்வமாகவும் உள்ளனவா என்கிற கேள்வி எழுகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து அரசியல்வாதிகள், ஆர்வலர்களின் பேச்சும் தர்க்கமும் எப்படி அமைந்திருக்கின்றன என்பது இதன் துணைக் கேள்வி.
இவ்வளவு காலம் நம்மை பாதித்து வந்த பொதுப் பிரச்சினைகள், வாழ்வாதாரத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றிய பேச்சுகள், விவாதங்கள், கருத்துப் பகிர்வுகள் நிகழ்கின்றன. ஆனால், இந்த விஷயங்கள் பேசப்பட ஆரம்பித்திருப்பதே வெற்றியாகக் கருதப்படும் ஆபத்தை நோக்கிச் செல்கிறோமோ என்கிற சந்தேகம் எழுகிறது. உணர்ச்சிவசப்பட்ட பேச்சும் அறிவியல்பூர்வமற்ற வாதங்களும் சில போராட்டங்களை வழிநடத்துகின்றன. தொடர்ச்சியாக தொலைக்காட்சி 'விவாத நிபுணர்கள்', சமூகஊடகப் 'போராளி'கள், சில அரசியல்வாதிகள் சுற்றுச்சூழல் அறிஞர்களாகவே உருமாறிவருகிறார்கள்.
மேம்போக்கான புரிதல், சமூக ஊடகத் தகவல்கள், கூகுள் போன்ற தேடுபொறிகளின் வழிகாட்டுதல் போன்றவற்றை வைத்துக்கொண்டு உணர்ச்சிபூர்மாகப் பேசுவது போராட்டம் சார்ந்து தற்காலிக ஆள்சேர்ப்புக்கு உதவலாம். ஆனால், ஒரு பிரச்சினையின் தீர்வை நோக்கிய பயணத்தில் பாதையைத் தவறவிடுவதற்கான சாத்தியம் இதில் அதிகம்.



அறிவியல் பார்வை அவசியம்


யார் வேண்டுமானாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குக் குரல் கொடுக்கலாம். அதேநேரம் அவர்களது குரல் கல்விப்புலம் சார்ந்தோ சாராமலோ புலமையும் நிபுணத்துவமும் பெற்றவர்கள் முன்வைக்கும் வாதங்களின் அடிப்படையில் எழுந்ததா? காரணம், பல துறைகளைப் போலவே 'ஆர்வலர்கள்' என்ற பெயரில் நாளும் புதிய 'நிபுணர்'களும் சமூக ஊடகப் 'போராளி'களும் இத்துறையில் முளைத்துக்கொண்டிருப்பது பிரச்சினையைத் திசைதிருப்புவதற்குப் போதுமான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. இன்னும் சில இடங்களில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கவனப்படுத்துபவர்கள் சார்ந்து அவதூறுப் பிரச்சாரங்களும் ஒரு போக்காக மாறிவருகின்றன.
'சிட்டுக்குருவி அழிந்துவருகிறது' என்கிற போலிக் கூப்பாட்டில் ஆரம்பித்து, 'காடுகள் அழிவது பிரச்சினையில்லை, மரம் நட்டால் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்', 'ஆற்றுநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அணைகட்டி அதை பயன்படுத்தலாமே' என்பது போன்ற அரைகுறை வாதங்களுக்கும் சில சுற்றுச்சூழல் போராட்டங்கள் சார்ந்து முன்வைக்கப்படும் வாதங்களுக்கும் இடையே அடிப்படை வேறுபாடு தேவைப்படுகிறது.
பூச்சிக்கொல்லிகளால் சுற்றுச்சூழல் சீர்கெடுவது பற்றி முதன்முதலில் உலகுக்கு அறிவித்த அமெரிக்க அறிவியலாளர் ரேச்சல் கார்சன் தன் வாதங்களை முன்வைத்தபோது, தன் நாடெங்கும் தூற்றப்பட்டார். பூச்சிக்கொல்லித் தொழிற்சாலைகளும் நவீன அறிவியலின் ஆராதகர்களும் ‘கம்யூனிஸ்ட்’, ‘போலியானவர்’ என்று அவரைக் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால், அவருடைய ஆய்வுகள் அறிவியல்பூர்வமாக இருந்ததால் அவரது வாதம் சரியென்று நிரூபிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் கண்டறிந்து தடுக்க அமெரிக்காவில் அரசு அமைப்பு உருவாக்கப்பட்டது, டி.டி.டி. பூச்சிக்கொல்லியும் பின்னர் தடை செய்யப்பட்டது.
இது நமக்குச் சிறந்ததொரு வரலாற்று ஆதாரமாக இருக்கிறது. இதுபோல சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கான தீர்வு அறிவியல்பூர்வமான வாதங்களில் இருந்தே சூல் கொள்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான உரையாடல்களில் நாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது!


உலகச் சுற்றுச்சூழல் தினம்; பிளாஸ்டிக் பை இல்லாத தமிழகமாக மாற்றுக: அன்புமணி வலியுறுத்தல்


இந்தாண்டு உலகச் சுற்றுச்சூழல் தினத்தன்று பிளாஸ்டிக் பை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ஜூன் 5 ஆம் தேதி கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அன்றைய நாள் உலகச் சுற்றுச்சூழல் தினமாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பதை இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா அவை முன் வைத்துள்ளது.
 ஐநா சார்பில் 2018 உலக சுற்றுச்சூழல் நாளை கொண்டாடும் முதன்மை நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். பிளாஸ்டிக் குப்பை மிகமிக ஆபத்தானது, அணுகுண்டுகளை விட ஆபத்தானவை என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரு பிளாஸ்டிக் பை சராசரியாக வெறும் 12 நிமிடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பின்னர் குப்பையில் எறியப்படுகிறது. ஆனால், அது 1000 வருடங்களுக்கு அழியாமல் இருந்து சுற்றுச்சூழலைக் கெடுக்கும். உலக அளவில் ஆண்டுக்கு 5 லட்சம் கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் ஆண்டுக்கு 1.30 கோடி டன் பிளாஸ்டிக் கடலில் கலக்கிறது. பிளாஸ்டிக் பைகளைத் தின்று கால்நடைகள், வனவிலங்குகள் ஏராளமாக இறக்கின்றன. கடல்வாழ் திமிங்கலங்கள், சீல்கள் மற்றும் பறவைகள் சாகின்றன. கடலின் இயற்கை சூழல் முற்றாக சீரழிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் குப்பை சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் வழிகின்றன, சுற்றுப்புறம் மாசுபடுகிறது. சாலையோரங்களில் தேங்கிக்கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி டெங்கு, மலேரியா எனப்பல நோய்களுக்கு காரணமாகிறது. மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புக்கும் பிளாஸ்டிக் பைகளே காரணமாகின்றன.
பிளாஸ்டிக் பைகளால் ஆறுகள், குளங்கள், ஓடைகள், ஏரிகள், நிலத்தடி நீர் என எல்லா நீர்வளமும் கடுமையாக மாசுபடுகிறது. பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட குப்பையை எரிப்பதால் மிக ஆபத்தான நச்சு வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. டையாக்சின் உள்ளிட்ட பலவிதமான நச்சு வாயுக்கள் வெளியாகின்றன.
அதிகரிக்கும் புற்றுநோய், ஆண்மைக் குறைவு, குழந்தையின்மை குறைபாடுகளுக்கு குப்பை எரிப்பும் ஒரு முதன்மைக் காரணம் ஆகும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா, இருதய நோய்கள் என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு காரணமாகும். குப்பை பிரச்சினையும் பிளாஸ்டிக் மாசுபாடும் ஒன்றிணைந்த கேடுகள் ஆகும். இதனை எதிர்க்கொள்ள அனைத்து குப்பைகளையும் கையாளும் அனைத்து விதிகளையும் முறையாக செயல்படுத்த வேண்டும்.
திடக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு, மின்னணு கழிவு, ஆபத்தான கழிவு, மருத்துவக் கழிவு, கட்டடக் கழிவு என குப்பை மேலாண்மைக்கான 6 விதிகள் 2016 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்திய அரசால் வெளியிடப்பட்டன. மாநிலங்களும் நகராட்சிகளும் இந்த விதிகளை செயலாக்குவதற்கான பொதுவான கால அவகாசம் ஓராண்டு வரை அளிக்கப்பட்டது.
ஆனால், மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் இவற்றை முறையாக செயல்படுத்தத் தவறிவிட்டன. மாநில அரசுகளின் மெத்தனப்போக்கை கண்டித்த இந்திய பசுமைத் தீர்ப்பாயம் 2017 ஜூன் 1 முதல் குப்பை மேலாண்மை விதிகளை தமிழக நகரங்கள் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து நகரங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தினத்திலிருந்து நாட்டின் எல்லா நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மைக்கான பிரச்சார இயக்கத்தை தொடங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால், ஓராண்டு காலம் கடந்த பின்னரும் இன்னமும் கூட சட்டவிதிகள் வெற்று காகிதமாகவே உள்ளன. அதே போன்று இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தில் தொடங்கும் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரமும் வாய்ப்பேச்சாக முடிந்துவிடக் கூடாது.
தமிழ்நாடு அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளையும், பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களது பொருட்களால் உருவாகும் குப்பையை அவர்களே வாடிக்கையாளரிடமிருந்து திரும்பவும் காசுகொடுத்து வாங்கிக்கொள்ளும் சட்டப்பூர்வமான உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கையை செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பழக்கத்தை கைவிட்டு துணிப்பைகளுக்கு மாற வேண்டும்.
பொதுமக்கள் கடைகளுக்கு துணிப்பையை கொண்டு செல்வதன் மூலம் பிளாஸ்டிக் பை கலாச்சாரத்தை ஒழிக்க உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்க வேண்டும்”  இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN