இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவு


#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL GS - 2


“India’s relations with Israel have, of late, acquired a depth and diversity, which cannot be rolled back.” Discuss. (UPSC 2018)

"இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகள் தாமதமாக ஆரம்பித்து  ஆழமாகவும், பன்முகத்தன்மையுடனும், திரும்ப பெற இயலாததாக உள்ளது ." விவாதி (UPSC 2018)


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்




மோடியின் இஸ்ரேல் பயணத்தால் இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்?


மோடியின் இஸ்ரேல் பயணத்தை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றோ.. முன்னோடியானது என்றோ சிலர் பாராட்டக்கூடும். இது மோடியின் தனிப்பட்ட ராஜதந்திரச் செயல்முறையாலும் இஸ்ரேல் பதிலுக்கு அளித்த சிறப்பான உபசரிப்பாலும்தான் சாத்தியமானது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்துக்கே வந்து,
அனைத்து மதங்களின் ஆன்மிகத் தலைவர்களையும் உடன் வைத்துக்கொண்டு மோடியை வரவேற்றார். அமெரிக்க அதிபர், போப்பாண்டவர் போன்ற பிரமுகர்களுக்கு மட்டுமே இப்படி வரவேற்பளிப்பது வழக்கம். விமான நிலையத்திலேயே மோடியை மும்முறை கட்டித் தழுவினார். மொத்தம் எத்தனை முறை மோடி தழுவப்பட்டார் என எண்ணிச் சொல்ல முடியாதபடிக்குத் தழுவல்கள் தொடர்ந்தன! இந்தியாவுடனான இஸ்ரேலிய உறவு ‘சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது’ என்று நாணத்துடன் குறிப்பிட்டார் நெதன்யாகு.
தனித்துவமான உறவு 

இஸ்ரேலுடன் இந்தியா தூதரக உறவு ஏற்படுத்திக்கொண்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. தேவைப்பட்டபோதெல்லாம் இந்தியாவுக்கு ராணுவச் சாதனங்களை வழங்கி உதவியுள்ளது இஸ்ரேல். இருந்தாலும், இஸ்ரேலுடனான உறவைப் பகிரங்கப்படுத்தாமல் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட்டது. இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் ஷிமோன் பெரஸ் 1993-ல் இந்தியா வந்தார். ஜஸ்வந்த் சிங் 2000-த்தில் பதிலுக்கு அங்கு சென்றார். அதிபர் எசர் வெய்ஸ்மேன் 1997-ல் இந்தியா வந்தார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2015-ல்தான் இஸ்ரேலுக்குச் சென்றார். 2003-ல் முதல் முறையாக இஸ்ரேல் பிரதமர் (ஏரில் ஷரோன்) இந்தியா வந்தார்.
ஆனால், அதிகாரிகள் நிலையில் தீவிரப் பரிமாற்றம் இருந்துவருகிறது. 1993-ல் இந்திய வெளியுறவுச் செயலர் ஜோதீந்திர நாத் தீட்சித் இஸ்ரேல் சென்றார். 1999-ல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா, ஜெனரல் (ஓய்வு) டேவிர் ஐவிரி 1999-ல் நேரடியாகப் பேசினர். ஒசிராக் என்ற இடத்தில் இராக் அமைத்திருந்த அணு உலை மீது 1981-ல் தாக்குதல் நடத்திய விமானப்படை தளபதி ஐவிரி என்பது குறிப்பிடத்தக்கது. 1998-ல் அணுகுண்டை வெடித்து சோதனை நடத்தப்போகும் இந்தியாவின் முடிவைத் தெரிந்துகொண்ட இஸ்ரேல், அதை ரகசியமாகக் காத்து ஒத்துழைத்தது.
தரையிலிருந்து புறப்பட்டு விண்ணில் பறக்கும் இலக்கை அழிக்கும் ‘பராக்-1’ ரக ஏவுகணைகளையும் ஆள் இல்லா வேவு விமானங்களையும் 2000-ல் வழங்கியது இஸ்ரேல். மேம்படுத்தப்பட்ட ‘மிக்-21’ ரக விமானத்தில் இஸ்ரேலின் அதி நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டன. 1999 கார்கில் போரின்போது, லேசர் உதவியுடன் பாய்ந்து புவிஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு விழுந்து வெடிக்கும் குண்டுகளை இஸ்ரேல் அளித்தது. எதிரிகளின் நிலைகளையும், நாம் தாக்க வேண்டிய இலக்குகளையும் முன்கூட்டியே கணித்து தெரிவிக்கக்கூடிய ‘ஃபால்கன்’ எச்சரிக்கை சாதனங்களையும் இஸ்ரேல் அளித்தது. அது அமெரிக்காவின் அதி நவீன ‘அவாக்ஸ்’ ரக விமானத்துக்கு ஈடான வலிமையை இந்தியா வைத்திருந்த ரஷ்யப் போர் விமானங்களுக்கு அளித்தது. டேங்குகளைத் தகர்க்கும் ஏவுகணை, தரையிலிருந்து புறப்பட்டு விண்ணில் பறந்து நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கக்கூடிய ஏவுகணை ஆகியவற்றையும் அளித்தது. இந்தியாவின் தேவைக்கு அதிக ராணுவ ஆயுதங்களையும் சாதனங்களையும் வழங்கும் நாடு இஸ்ரேல். இஸ்ரேலின் ராணுவ ஏற்றுமதியில் 40% இந்தியாவுக்குத்தான்.
குஜராத்தின் வைர வியாபாரிகளுக்கும் இஸ்ரேலுக்கும் 1992-க்கு முன்பிருந்தே வணிகத் தொடர்புகள் இருந்தன. இப்போது 500 கோடி டாலர்கள் மதிப்புக்கு தங்க நகைகள், நவரத்தினக் கற்கள் விற்பனையாகின்றன. அறிவியல் -தொழில்நுட்பம், வேளாண்மை, உயிரித் தொழில்நுட்பம், விண்வெளியியல் ஆகிய துறைகளிலும் இப்போது ஒத்துழைப்பு பெருகிவருகிறது.
இளம் இஸ்ரேலியர்கள் விரும்பிப் பார்க்கும் நாடுகளில் இந்தியா முக்கிய இடம்பிடித்துள்ளது. வாரணாசி, மணாலி, கோவா ஆகிய இடங்களுக்கு இஸ்ரேலியர்கள் அதிகம் விரும்பிச் செல்கின்றனர்.
முன்கூட்டிய திட்டமிடல் 

மோடியின் இந்தப் பயணம் பலன் தர வேண்டும் என்று இரு நாடுகளும் முன்கூட்டியே திட்டமிட்டன. இஸ்ரேல் செல்வதற்கு முன்னதாகவே ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவுதி அரேபியா, கத்தார், ஈரான் ஆகிய நாடுகளுக்கு மோடி சென்றுவந்தார். பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை டெல்லியில் கடந்த மே மாதம் வரவேற்றுப் பேசினார். எனவே, இஸ்ரேல் சென்றபோது ரமல்லா செல்வதைத் தவிர்க்க முடிந்தது.
வேளாண்மைத் துறை, நீர்மேலாண்மை, விண்வெளித் துறை ஆகியவற்றில் ஒத்துழைக்க இப்போது புதிய உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டன. பிரதமரின் அலுவலகம் இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்தது.
இஸ்ரேல் தரப்பில், 11 அரசுத் துறைகளிடமிருந்து கிடைத்த தரவுகள் அடிப்படையில் 7.96 கோடி டாலர்கள் மதிப்புக்கு இந்தியாவுடன் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் விளைவாக, ‘வியூகரீதியிலான கூட்டு’ என்ற அளவுக்கு இரு நாடுகளின் ஒத்துழைப்பு உயர்ந்துஉள்ளது. ராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகிய துறைகள் தவிர அறிவியல் -தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளிலும் இணைந்து செயல்பட ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவற்றில் மூன்று விண்வெளி ஆராய்ச்சிக்கானது. இரண்டு நீர் மேலாண்மை - சுகாதாரம் தொடர்பானது. ஒன்று, வேளாண் துறை தொடர்பிலானது. கடந்த மூன்று ஆண்டுகளில் தோட்டக்கலை மற்றும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற உதவும் 15 மையங்களை இந்தியாவில் தொடங்கியிருக்கிறது இஸ்ரேல். அது தனக்குக் கிடைக்கும் நீரில் 90%ஐ மறுசுழற்சி மூலம் சுத்திகரித்துப் பயன்படுத்துகிறது. அதன் கழிவு நீரில் 95% அளவு வேளாண்மைக்கே பயன்படுகிறது.
அறிவுசார் தொழில்களைத் தொடங்கவும் ஊக்குவிக்கவும் இரு நாடுகளும் இணைந்து தலா 2 கோடி டாலர்களை முதலீடு செய்து புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதியத்தை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேலில் இப்போது 4,500 ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களும் 140 அரவணைப்பு மையங்களும் உள்ளன. புதிய பொருட்களைத் தயாரிப்பவை அல்லது சேவையை அளிப்பவை ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களாகும். இவை மிகச் சில முதலீட்டாளர்களால், குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்டு, பிறகு பிரம்மாண்டமாக வளர்த்தெடுக்கப்படும். இந்தியாவுடன் இஸ்ரேல் பங்கேற்கும் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் மூலம் ஐந்தாண்டுகளுக்கு 500 கோடி டாலர்கள் மதிப்புக்கு விற்றுமுதல்கள் ஏற்படும் என்று ‘நாஸ்காம்’, ‘அக்செஞ்சர்’ ஆகிய நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன.
ஒப்பந்தங்கள் தொடர்பாக செய்த அறிவிப்புகளை நிறைவேற்ற பணிக் குழுவை ஏற்படுத்த இந்தியாவும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீராக வளர்ச்சி பெறவும், பெஞ்சமின் நெதன்யாகு அடுத்து இந்தியாவுக்கு அரசு விருந்தினராக வரவும் இது பெரிதும் உதவும்.

”மோடியின் இஸ்ரேல் பயணம் பாலஸ்தீன உறவை பாதிக்கக் கூடாது”: சசிதரூர்

“மோடியின் இஸ்ரேல் பயணத்தால் இருநாட்டு உறவும் முழு முதிர்ச்சியை அடைந்தாலும், இந்த பயணம் பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது”
இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு முதல் பிரதமராக மோடி பயணம் மேற்கொண்டிருப்பது, இருநாட்டு உறவுகளை மேலும் வலுவடைய செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், மோடியின் இஸ்ரேல் பயணம் பாலஸ்தீனம் மீதான இந்திய உறவை சிதைத்து விடக்கூடாது என்பதும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையே 25 ஆண்டுகாலமாக தூதரக ரீதியிலான உறவு நீடித்தாலும், இந்தியாவிலிருந்து இதுவரை எந்த பிரதமரும் இஸ்ரேலுக்கு பயணம் செய்ததில்லை. ஆனால், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் இந்தியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டனர். இதன் தாக்கமாக, கடந்த 2015-ஆம் ஆண்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். ஆனால், பாலஸ்தீன பிரச்சனை காரணமாக இந்திய பிரதமர் ஒருவர் கூட இஸ்ரேலுக்கு செல்லவில்லை.
இதை தகர்க்கும் விதமாக, பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக செவ்வாய் கிழமை இஸ்ரேல் சென்றார். டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான தளத்தில் மோடி தரையிறங்கினார். அங்கு அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் வரவேற்றனர். இதன்பின், நாஜி ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட யூதர்களுக்காக மேற்கு ஜெருசலேமில் அமைந்துள்ள நினைவிடத்தில் இருநாட்டு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் இந்த பயணம், பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் உறவில் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசிதரூர், “முதன்முறையாக இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு சென்றிருப்பதால் இரு நாட்டு உறவும் முழு முதிர்ச்சியை அடைந்துள்ளது. ஆனால், இந்த பயணம் பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது”, என தெரிவித்தார்.
இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் இஸ்ரேல் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான புரிந்துணர்வு கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, வேளாண்மை தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, சுற்றுலா, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து இயங்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் இருநாட்டு தூதரக உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் முக்கிய நினைவிடங்களை பார்வையிட்ட பின், வியாழக்கிழமை மாலை தனது பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க புறப்படுகிறார்.

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் ரகசிய உறவு இருக்கிறதா?



2003இல் இந்தியா வருகைதந்த இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோனுடன் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்

2003ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். அதன்பிறகு, 2014ம் ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கில் இரு நாடுகளுக்கும் இடையே உயர்நிலைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அப்போது இந்தியப் பிரதமர் மோதியை சந்தித்தப்பிறகு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இனி இருதரப்பு உறவில் 'வானமே எல்லை' என்று குறிப்பிட்டார்.
பெஞ்சமின் நெதன்யாகுவின் 'வானமே எல்லை' என்ற சொல், இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ரகசிய உறவுகள் இருப்பதான ஊகங்களை கிளப்பிவிட்டன.
அடுத்த ஆண்டே 'வானமே எல்லை' என்பதன் பொருளும் வெளிப்படையாக தெரிந்தது. 2015 ஜூலை மாதத்தில், ஐ.நா மனித உரிமைகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையை இஸ்ரேலிய தூதர் டேனியல் கேர்மோன் வரவேற்றார்.
2006ஆம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோதி முதல் முறையாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமரான பிறகு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்புவிடுத்தார்.
இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் மோதியின் ஆட்சியில் வழக்கத்தைவிட மாறுபட்டதாக இருக்க போகிறது என்று இந்தியாவிலும் பேச்சு தொடங்கியது.
ஆனால், அண்மையில் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அறிவிப்பிற்கு எதிராக ஐ.நா பொதுச்சபையில் இந்தியா வாக்களித்தது.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை மோதியின் கட்சியை சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி போன்ற தலைவர்களும் விமர்சித்தார்கள். இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்த இந்தியா பெரிய தவறு செய்து விட்டதாக கூறிய சுவாமி, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரே நாடு இஸ்ரேல்தான் என்று சுட்டிக்காட்டினார்.

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இரகசிய உறவு இருக்கிறதா?

புத்தாண்டில் அடுத்த வாரம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு வரவிருக்கும் நிலையில் இந்தியாவின் இந்த நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்துமா?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் செயலராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற கன்வால் சிபல் கூறுகையில், "இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்த இந்தியா ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை. டிரம்ப் ஜெருசலேத்தை இஸ்ரேலிய தலைநகராக திடீரென அறிவித்ததுதான் ஆச்சரியமளிக்கிறது" என்கிறார்.
டிரம்ப்பின் இந்த முடிவை அவருடைய அரசை சேர்ந்தவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியா ஆழ்ந்து சிந்தித்தே முடிவெடுத்திருக்கிறது. பாலத்தீனியர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மத்தியஸ்தத்தை ஏற்படுத்த தற்போது அரபு நாடுகளும் முயன்று வருகின்றன. இந்தியாவிற்கும் அத்தகைய ஒரு இடம் தேவை."
இந்தியா இஸ்ரேலுடன் ரகசிய காதல் கொண்டுள்ளதா?
இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே ரகசிய உறவு இருப்பதாக கூறப்படுவது தற்போது காலாவதியாகிவிட்ட விவகாரம் என்று கன்வல் சிபல் கூறுகிறார்.
"இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது வெளிப்படையான இணக்கமும், அன்பும் நிலவுகிறது, இந்தியப் பிரதமர் அங்கு செல்கிறார், இஸ்ரேலியப் பிரதமர் இங்கு வருகிறார். இருவரும் பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் ரகசிய காதல் என்று எப்படி சொல்லமுடியும்?'' என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அறிவிப்பிற்கு பரவலான எதிர்ப்புகள் எழுந்தன.
அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றது. இந்தியா உட்பட 128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.
இந்தியா, தனது வெளியுறவு கொள்கைகளின் அடிப்படையில் மிகவும் சிந்தித்தே ஐ.நா தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை எடுத்தது.
இந்திய வெளியுறவுக் கொள்கையில் நேருவின் சாயல்
மூன்றாம் உலக நாடுகளின் ஒற்றுமை மற்றும் அஹிம்சை கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நேருவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில், இந்தியா பாலத்தீனியர்களை உறுதியாக ஆதரித்து வருகிறது. 1950இல் இந்தியா, இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்தது.
இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இரகசிய உறவு இருக்கிறதா?

1992இல் இஸ்ரேலுடன் ராஜாங்கரீதியிலான உறவுகளை இந்தியா ஏற்படுத்தி இருந்தாலும், அதை மேம்படுத்துவதில் அதிக ஆர்வத்தை காட்டவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இந்தியா இஸ்ரேலுடன் வெளிப்படையாக சுமூக உறவுகள் கொண்டிருப்பதை இந்தியா தொடர்ந்து தவிர்த்தே வந்துள்ளது. அரபு நாடுகளுடன் நல்ல உறவைக் கொண்டுள்ள இந்தியா, இஸ்ரேலுடனான உறவில் முன் அடி எடுத்து வைப்பதற்கு தயங்குவதற்கு காரணம், பெருமளவிலான இந்திய முஸ்லிம்கள் அரபு நாடுகளில் வேலை செய்வதே.
சர்வதேச அளவில் இந்தியா வலுவடைந்து வரும்போது, நாட்டின் நலனுக்கு ஏற்றாற்போல் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டிருப்பதாக பல நிபுணர்கள் நம்புகின்றனர்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் 1990 வரை நீடித்த பனிப்போரின் முடிவில், உலக நாடுகள் ஒரு புதிய திருப்பத்தை நோக்கிச் சென்றன.
இந்தியாவும் சர்வதேச நாடுகளின் மத்தியில் தன்னை முன்னிறுத்தியது. மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் தன்னுடைய நலன்களுக்கு ஏற்றவாறு இந்தியா தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டது.
விவசாயம், பாதுகாப்பு, மின்சாரம் அரசியல் நலன்களுக்காக மத்திய கிழக்குடன் இந்தியாவின் உறவு முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய வர்த்தக அமைச்சகத்தின்படி, 2016-17இல் அரபு நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகம் 121 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இது இந்தியாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில் 18.25% ஆகும். அதே நேரத்தில், இஸ்ரேலுடனான இந்தியாவின் வர்த்தகம் வெறும் 5 பில்லியன் டாலர்தான்.
இஸ்ரேலுடன் இந்தியாவின் பாதுகாப்பு உறவு மிக ஆழமானது என்றாலும், அரபு நாடுகளில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு, அந்நிய செலாவணி மற்றும் மின்சாரம் ஆகியவை அதைவிட மிக முக்கியமானவை என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியும் இஸ்ரேலும்
மோதியின் ஆட்சிக்காலத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கியது. இந்தியாவில் உள்ள வலதுசாரி சித்தாந்தவாதிகள் தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலிடம் பரிவுணர்வு கொண்டிருந்தனர்.
இந்த முன்முயற்சியில், இந்தியா அணிசேரா நாடுகளுக்கு இடையே இஸ்ரேல் எதிர்ப்பு திட்டங்கள் ஆதிக்கம் செலுத்த இந்தியா அனுமதிக்கவில்லை. 2015இல், ஐ.நா தீர்மானம் ஒன்றில் இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும்

சென்ற ஆண்டு பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இந்தியா வந்தபோது, பாலத்தீனத்தின் கவலைகளை பிரதமர் மோதி ஆதரித்தார். அமைதியான இஸ்ரேல் என்பதுடன் இறையாண்மை, சுதந்திரமான மற்றும் ஒன்றிணைந்த பாலத்தீனம் பற்றியும் மோதி பேசினார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணமாக சென்ற மோதிதான் இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் விவகாரத்தில் அப்போது தெளிவான குறிப்பை மோதி உணர்த்தினார்.

அரபுடன் இஸ்ரேலின் நட்பு
அரபு நாடுகளுடனான ராஜாங்க உறவுகளையும் சுமூகமாகவே வைத்துக்கொண்ட பிரதமர் மோதி, இஸ்ரேலுக்கு செல்வதற்கு முன்னதாக, கத்தார், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். குடியரசு தினக் கொண்டாட்டாங்களில் அபுதாபியின் பட்டத்து இளவரசர் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டார்.
இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்த இந்தியா, இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான உறவை சுமூகமாக்கும் வாய்ப்புகள் இன்னமும் இருப்பதாக கூறியிருக்கிறது.
இஸ்ரேல் சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோதி பாலத்தீனிய பகுதியான ராமல்லாவிற்கு செல்லவில்லை.
கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்றே இந்தியாவும் ஐ.நாவில் டிரம்பின் அறிவிப்புக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் தவிர்த்திருக்க முடியாதா?

சர்வதேச விவகாரங்களில் நிபுணரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான சேஷாத்ரி சாரி கூறுகிறார், "இந்தியா, அமெரிக்காவின் கண்ணோட்டத்தில் இஸ்ரேலுடனான உறவை பார்க்க முடியாது. இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவில் எந்த பங்கமும் ஏற்படாது. ஆனால் அதற்காக பாலத்தீனம் மீதான அக்கறையையும் தவிர்க்க முடியாது."
"இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதோடு நமக்கான சொந்த நலன்களே நமக்கு முன்னுரிமையாக இருக்கமுடியும். ஜெருசலேம் பற்றி அமெரிக்கா சுதந்திரமாக எடுத்திருக்கும் முடிவை நாம் எப்படி ஆதரிக்க முடியும்?"

அதேபோல் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் ஒரே நாடு இஸ்ரேல் என்ற கருத்து பற்றி கூறும் சேஷாத்ரி சாரி, "ஐ.நா. சபையில், ரஷ்யாவும் காஷ்மீருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. வேறு பல நாடுகளும் நமக்கு ஆதரவாக இருந்திருக்கின்றன. இந்தியாவின் இந்த முடிவு இஸ்ரேலுக்கோ, அமெரிக்காவுக்கோ அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்காது."

ஆட்சிகள் மாறினாலும் மாறாத வெளியுறவுக் கொள்கை
இஸ்ரேல் தொடர்பான கொள்கைகளில் காங்கிரஸ் ஆட்சியிலும், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியிலும் மாற்றங்கள் இருந்ததா? சாரியின் கருத்துப்படி, ''ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும், வெளியுறவு, பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரக் கொள்கைகளில் எந்த வித்தியாசமும் ஏற்படவில்லை.
இஸ்ரேலுடன் சுமூகமான உறவை மேற்கொள்வது என்பது முஸ்லிம் விரோத போக்கு என்று அர்த்தமில்லை என்று பல வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் அரசின் நிலைப்பாடு யதார்த்தமானதாக இருப்பதாக கூறும் அவர்கள், இந்துத்துவாவை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை என்றும் சொல்கின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகள் அனைத்துடனும் இந்தியா சுமூக உறவை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பனிப்போரின் ஆரம்ப காலகட்டத்தில், பிரதமர் ஜவஹர்லால் நேரு 1955 பாண்துங் மாநாட்டில் (Bandung conference) இஸ்ரேலை அழைப்பதற்கு யோசித்தாலும், பின்னர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.
பனிப்போருக்கு பிறகு, உலகின் சமன்பாடுகள் மாறியபோது, இந்தியா இஸ்ரேலுடனான ராணுவ உறவை அதிகரிக்கத் தொடங்கியது.

1960 முதல் இஸ்ரேலுடன் நெருக்கம்
1960 முதல் இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகள் நெருக்கமாயின. 1962, 1965 மற்றும் 1971 இல் இஸ்ரேல் இந்தியாவுக்கு ராணுவரீதியாக உதவியது. பாகிஸ்தானுடனான இந்தியப் போருக்கு பிறகு, பங்களாதேஷ் தனிநாடாக உருவெடுத்தபோது அதற்கு அங்கீகாரம் வழங்கிய முதல் நாடு இஸ்ரேல்தான்.
1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொரார்ஜி தேசாயின் ஆட்சியில், இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கமானது.

வெளியுறவுக் கொள்கைகளில் தனது தந்தையின் வழியையே பின்பற்றினார் இந்திரா காந்தி. தாயின் தடத்தை ஒட்டியே நடந்த ராஜீவ் காந்தி, ஐ.நா சபை பொதுக்கூட்டத்தின்போது அப்போதைய இஸ்ரேல் பிரதமரை சந்தித்தார்.
அதுதான் இந்தியப் பிரதமரும், இஸ்ரேலிய பிரதமர் ஒருவரும் முதன்முறையாக சந்தித்த சரித்திர நிகழ்வு. அந்த சமயத்தில் பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டம் குறித்து இந்தியா கவலை கொண்டிருந்தது. எனவே இஸ்ரேலுடனான உறவு பற்றிய தனது தயக்கத்தை கைவிட்டு, நட்புரீதியில் கைகுலுக்குவதே உசிதம் என்று கருதியது இந்தியா.


இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இரகசிய உறவு இருக்கிறதா?
1991இல் இந்தியா பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை மேற்கொண்டபோது, இஸ்ரேலுடன் முறையான ராஜாங்க உறவுகளும் உருவாகின. பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும்போதெல்லாம், இஸ்ரேலுடனான உறவுகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அரேபியர்களுக்கு கோபம் ஏற்படுத்தும் விதத்தில் இந்தியா தனது உறவை விரிவுபடுத்தியதில்லை.
1992இல் இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டபிறகு, 2000ஆம் ஆண்டில், எல்.கே. அத்வானி இஸ்ரேலுக்கு சென்றதுதான் மூத்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்த ஒருவர் அந்த நாட்டிற்கு மேற்கொண்ட முதல் அரசு முறைப் பயணமாகும். அந்த ஆண்டில்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தோ-இஸ்ரேலிய கூட்டு குழு உருவாக்கப்பட்டது.
2003ல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா, அமெரிக்க யூத குழுவில் உரையாற்றியபோது, இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணையுமாறு கேட்டுக்கொண்டார்.
2004ல் காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது, இஸ்ரேல்-இந்தியா உறவுகள் தலைப்புச் செய்திகளில் இருந்து இறங்கிவிட்டன. இருந்தாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் எந்தவித கசப்பும் ஏற்படவில்லை.
மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஆழமாகின. இஸ்ரேல் பிரதமர் அடுத்த மாதம் இந்தியாவிற்கு வரும்போது, இரு நாடுகளுக்கு இடையிலான அன்பும் காதலும் ரகசியமானதா என்ற கேள்வியை எழுப்புபவர்களுக்கு அப்போது உரிய பதில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.






No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN