பாசல் பீமா யோஜனா என்றால் என்ன?


# அடிப்படை கற்றல் 
Image result for fasal bima yojana logo


பிரதம மந்திரி பயிர் காப்பீடு யோசனை (Pradhan Mantri Fasal Bima Yojana, பிரதம மந்திரி பசல் பீமா யோசனை) என்ற பிரதமரின் புதிய வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இழப்பீட்டை
சரியாகவும், விரைவாகவும் கிடைக்கச் செய்ய 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் பிரதமர் மோடி 2016 பெப்ரவரி 18 அன்று தொடங்கி வைத்தார். கரும்பு மற்றும் வாழை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5 சதவிகிதமும், காரிஃப் பருவத்தில் பயிரிடப்படும் உணவுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு 2 சதவிகிதம், ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு 1.5 சதவிகிதம் என காப்புப்படி அறிவிக்கப்பட்டுள்ளது







திட்டத்தின் பயன்கள்


  1. அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்கும் சேர்த்து காப்பீடு செய்ய முடியும்.
  2. தண்ணீரில் மூழ்கிய பயிர்களுக்கும் இழப்பீடு உண்டு’
  3. ஏற்கெனவே இருந்த தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் ‘புயல் பாதிப்பு இழப்பீடு’ கடலோர மாவட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 
  4. ஆனால், புதிய திட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் புயல் பாதிப்பு இழப்பீடு வழங்கப்படும் .
  5. ஏற்கெனவே உள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களில் இழப்பீடு பெற, விவசாயிகள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் புதிய திட்டத்தில் 30 முதல் 45 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.
  6. விதைப்புக்கும் அறுவடைக்கும் இடைப்பட்ட காலத்தில் காற்று, பூச்சி, நோய்த்தாக்குதலால் பயிர்களில் ஏதேனும் பாதிப்புகள் நேர்ந்தால், மொத்தக் காப்பீட்டுத் தொகையில் 25 சதவிகிதம் அப்போதே கிடைக்கும். அறுவடைக்கும்ப் பிந்தைய இழப்புகளுக்கும் காப்பீடு பெறலாம்


கட்டுரை எண் 1

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மோடிதலைமையிலான பாஜக அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்த போது, ஏதோ விவசாயிகளுக்காகவே ஆட்சிக்கு வந்தவர்களைப்போல் விவசாயிகளின் தற்கொலைக்கு முடிவு கட்டபோவதாகவும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஆகின்ற உற்பத்திச் செலவை காட்டிலும்கூடுதலாக 50 சதவீதம் கொள்முதல் விலை நிர்ணயித்து வழங்க போவதாகவும், விவசாயத்தில் கூடுதல் முதலீடு, விவசாயத்தில் வேலை வாய்ப்புக்களை பெருக்கப்போவதாகவும், விவசாயிகளுக்கு நீர்பாசன வசதி, பென்சன் வசதி, இன்சூரன்ஸ் வசதிஎன ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது.
ஆனால், இந்த வாக்குறுதிகள் நடைமுறையில் என்ன ஆனது என்று கவனித்தால் அனைத்தும் வெறும் வாய்ப்பந்தல், வெத்து வேட்டு என புரியும்.ஏன் என்றால் தங்கள் கோரிக்கைகளுக்காக விவசாயிகளும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்உள்ளிட்ட விவசாயிகள் சங்கங்களும் தொடர்ந்துபோராடி வருவதை நாம் அறிவோம்.2016-2017 ஆம் ஆண்டுக்கு நாடு முழுவதும்விவசாயிகளுக்கான, விவசாய நிலங்களின் பரப்பிற்கு ஏற்ப இன்சூரன்ஸ் செய்யப்போவதாகவும். இதில் சேர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாய பெருமக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்று மத்திய மோடி அரசு, பாரத பிரதமரின் பாசல் பீமா யோஜனா (PMFBY) என்ற பயிர்க்காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் – லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களின் நேரடி பங்காகவும் அரசின் உதவியாகவும் ரூ.21,500 கோடியை செலுத்தி கூட்டுறவு சங்கங்கள் மூலமும், சென்னையில் உள்ள அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட். என்ற நிறுவனத்தில் இணைந்தனர். தங்களது விளை நிலங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்றபெரும் நம்பிக்கையுடன் இருந்தனர் விவசாயிகள் ஆனால் கிடைத்தது வெறும் ஏமாற்றமே.
விளைச்சல் பாதிப்பு அளவிடுதல்
ஏன் என்றால் தமிழகத்தில் ஆங்காங்கே சிலவிவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டு, அந்த சொற்பத்தொகையும் பெரும் பகுதி விவசாயிகள் வாங்கிய கடனுக்காக வரவுவைத்துக் கொள்வதும், விரல் விட்டு என்னக்கூடியசில விவசாயிகளுக்கு மட்டும் கையில் கிடைப்பதுமாக உள்ளது. இதில் பெரிய மோசடி என்னவென்றால்.காப்பீட்டுத் தொகை செலுத்திய விவசாயியின் நிலம், அதில் விவசாயம் செய்த பயிர் பாதிப்புக்கு இழப்பீடுஎன்ற தன்மையில் இல்லாமல் வருவாய்க் கிராம அடிப்படையில் சர்வே செய்து அதில் ஒட்டு மொத்தவிவசாயமும் பாதித்திருந்தால் தான் இழப்பீடு கிடைக்குமாம். விவசாயத்துறையும் – இன்சூரன்ஸ் நிறுவனமும் இது தொடர்பாக இணைந்து செய்யும் சர்வேயே மோசடியானது.ஒரு வருவாய்க் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர்விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தின் சொந்தக்காரர்கள் சுமார் 100 பேர் என்று வைத்துக் கொண்டால் இதில் வாய்ப்பும் வசதியும் உள்ள விவசாயிகள் நான்கு பேர் மட்டும், தலா 25 சென்ட் வீதம் நான்குஇடங்களில் நெல் நடவு செய்திருந்து அது விளைந்திருந்தால், விளைந்த நான்கு இடத்திலும்5 அடிநீளம், 5 அடி அகலம் என அளந்து அந்த பரப்பில் உள்ள நெற்கதிரை அறுத்து சுத்தம் செய்துஅளவீடு செய்து, அதில் 4×4=16 கிலோ நெல் கிடைத்ததாக விவசாயத்துறையும், இன்சூரன்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தினால் அது முழு விளைச்சல்கிராமம்.இதன் காரணமாக அந்த வருவாய்க் கிராமத்தில் எந்த விவசாயிக்கும் விவசாய காப்பீட்டுத்தொகை கிடைக்காது. இத்தகைய அறிவுக்குப் பொருந்தாத நடவடிக்கையால் ஒருவருவாய்க் கிராமத்தில் 1 ஏக்கர் விளைந்தால் கூட 99 ஏக்கர் நிலமும். அதன் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்.இப்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காப்பீடு மறுக்கப்பட்ட வருவாய்க் கிராமங்களும், அதில் உள்ள விவசாயிகளும் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர்.
மதுரை மாவட்ட காப்பீட்டின் நிலை
தமிழகத்தில் பல மாவட்டங்களில் விவசாய இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ள நிலையில் மிகவும் காலதாமதமாக – 30.6.17 ஆம் தேதியிட்டு மதுரை மாவட்டத்தில் நெல் பாதிப்புக்களுக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகையும் அதற்காக விவசாயிகளின் பெயர்ப் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விபரம் என்பது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக உள்ளது.
மதுரை மாவட்டத்தில் 2016- 2017 ஆம்ஆண்டுக்கு இரண்டாம் போக நெல் சாகுபடி செய்த 6,859விவசாயிகளும் கோடை நெல் சாகுபடி செய்த 1110 விவசாயிகளும் என நெல்லுக்கு 7969 விவசாயிகளும் அதோடு கரும்பு, வாழை, பருத்தி, வெங்காயம், மக்காச்சோளம், தட்டைப்பயிறு, துவரம் பருப்புஎன இதர விவசாயத்திற்காக இழப்பீடு கோரி 10, 801 விவசாயிகளும் காப்பீடு செய்துள்ளார்கள்.இதில் தற்பொழுது மதுரை மாவட்டத்தில் இரண்டாம் போகத்துக்கும் கோடைக்கும் மட்டும் – இழப்பீட்டுத் தொகை கிடைக்க வேண்டிய 7,969 விவசாயிகளில் வெறும் 533 ( மறுக்கப்பட்ட வருவாய்க்கிராமங்களில் உள்ள விவசாயிகளும் இந்தஎண்ணிக்கையில் அடக்கம்) பேருக்கு அறிவிக்கப்பட்ட தொகையிலும் பெரும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.
(உ.ம்), மதுரை வடக்கு வட்டம், மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சமயநல்லூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் 350 விவசாயிகள் நெல்லுக்கு இன்சூரன்ஸ்க்கான பங்குத் தொகையை செலுத்தியுள்ளார்கள். இதில் வெறும் 64 விவசாயிகளுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் பல ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.(உ.ம்)நிலத்தின் பரப்பளவு, செலுத்தியத் தொகை, செலுத்திய காலம் மூன்றும் ஒரே அளவாக இருந்தாலும் மாவட்டம் முழுவதும் பல ஏற்றத்தாழ்வுகளுடன், இழப்பீட்டுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் இப்படி வரக்கூடாது. இழப்பீட்டுத்தொகை மூன்று நிலையில் முடிவு செய்யப்படும். 1,உழுது நடவு செய்யாத நிலை. 2. நடவு செய்து கருகுதல், 3.அறுவடைக்குப் பிறகு ஏற்படும் பாதிப்பு, இப்படி ஏன் வந்தது என்று தெரியவில்லை.
இன்சூரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுச் சொல்லுகிறோம் என்று கூறுகிறார்கள்.மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள சிறுவாலை வருவாய்க்கிராமம் உட்பட பல வருவாய்க்கிராமங்கள் முழு விளைச்சல்பகுதி என விவசாயத்துறையும் இன்சூரன்ஸ் நிறுவனமும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.அதனால் சிறுவாலை வருவாய்க்கிராமம் உட்பட பல வருவாய்க்கிராமங்களில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில், பாரதபிரதமரின் பாசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத்திட்டத்தில், காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையைசெலுத்தி நம்பிக் காத்திருந்த விவசாயிகள், தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறி பெரும் சோகத்தில்உள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டு சோகத்தில் மூழ்கியுள்ள விவசாயக் குடும்பங்களை பாதுகாக்கின்ற வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.விவசாயிகளின் இழப்பீடு கோரி (இழப்பீட்டுக்கான பிரீமியத் தொகை செலுத்தி) மதுரை மாவட்டத்தில் காத்திருக்கும் – நெல், கரும்பு, வாழை,பருத்தி,வெங்காயம், மக்காச்சோளம், தட்டை, துவரை உள்ளிட்ட அனைத்துப் பயிர் விவசாயம் செய்த 18,770 விவசாயிகளுக்கும் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டும்.அத்துடன் இன்னும் விவசாய இன்சூரன்ஸ்க்குள் சேர்க்கப்படாத சிறுதானிய விவசாயங்களையும் காப்பீட்டில் சேர்த்து அனைத்துப் பகுதி விவசாயிகளையும் பாதுகாக்க மத்திய மோடி அரசும், தமிழக எடப்பாடி பழனிசாமி அரசும் முன்வரவேண்டும்.

பயிர் காப்பீடு திட்டத்தினால் பெருநிறுவனங்களுக்கு மட்டும் லாபம்: விவசாய சங்கத் தலைவர்கள் சாடல்

நன்றி : தமிழ் ஹிந்து 

மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தால் அதை நடத்தும் பெருநிறுவனங்கள் மட்டுமே பலன் கிடைப்பதாக தமிழக விவசாய சங்கங்கள் கூறியுள்ளனர். டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு வந்தவர்கள், இது குறித்து அவர்கள் ‘தி இந்து’விடம் கூறிய கருத்துகள் பின்வருமாறு: 

பி.அய்யாகண்ணு, தலைவர், தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கம்: காப்பீடுக்காக பணம் கட்டிய விவசாயிகள் பாதிப்படைந்த போதும், அதன் பலன் இதுவரை யாருக்குமே கிடைக்கவில்லை. இந்த திட்டத்தின்படி மாவட்டம் முழுவதிலும் பாதிப்பு ஏற்பட்டால் தான் காப்பீடு தொகை கிடைக்கும். இது தாலுக்கா, ஒன்றியம் எனப் படிப்படியாகக் சுருங்கி கடந்த வருடம் கிராம அடிப்படையில் அளிப்பதாக கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், இதற்கானப் பிரிமியம் தொகை கட்டுவதால் அதை நடத்தும் பெருநிறுவனங்களுக்குத் தான் லாபமே தவிர விவசாயிகளுக்கு அல்ல. இதுவரை ஒரு விவசாயிக்கும் இதன் பலன் கிடைக்கவில்லை. எனவே, காப்பீடு திட்ட அம்சங்கள் ப்லன் அளிக்கும்படி மாற்றி அமைப்பது அவசியம் 

பி.ஆர்.காவேரி பாண்டியன், ஒருங்கிணைப்பாளர், தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு: தமிழகத்தில் உள்ள 88 லட்சம் விவசாயிகளில் வெறும் எட்டு லட்சம் பேர் தான் காப்பீடு செய்துள்ளனர். இதில் நான்கு கட்டங்களாக இழப்பீடு தொகை அளிக்க ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தியும் பலன் கிடைக்காமல் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பிரிமியம் மற்றும் இழப்பீடு தொகையில் ஒரு குறிப்பிட்ட பங்கினை பகிர்ந்து கொள்கின்றன. இழப்பீட்டில் சென்ற 2015-16 ஆண்டிற்கானது இன்னும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படவில்லை. இதற்கு தங்களிடம் நிதி இல்லை எனக் கூறி தமிழக அரசு காலம் கடத்துகிறது. தனியாரை ஊக்கப்படுத்தும் நோக்கம் காரணமாக, மத்திய அரசு அதற்கான தொகையை தனது பட்ஜெட்டிலேயே ஒதுக்கி விடுகிறது. காப்பீடின் பிரிமியத்திற்கான தொகை கடந்த வருடம் அதிகரிக்கப்பட்டது. இதனால், அதன் பெருநிறுவனங்களுக்கு தான் லாபமே தவிர விவசாயிகளுக்கு அல்ல.. 

இளங்கீரன், தலைவர், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு: தமிழக விவசாயிகள் சங்கம்: நீண்டகாலப் போராட்டத்திற்கு பின் சட்டமாகக் கொண்டுவரப்பட்டது பயிர் காப்பீடு. இதை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மகசூலுக்கு ஏற்ப பாதிப்பு தொகை அளிப்பதற்காக அமலாக்கப்பட்டது. தேசிய வேளாண்காப்பீடு திட்டம் எனும் பொதுத்துறை நடத்தி வந்ததை 12 தனியார் பெருநிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டு விட்டது. இதனால் அது, வெற்றிகரமாக செயல்படும் என விவசாயிகளுக்கும் நம்பிக்கை இல்லை. இதை புரிந்து கொண்ட அரசு அதை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு செல்லப்படாமல் பெயரளவிலேயே உள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடையாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN