விவசாயிகளைக் காக்கும் தேவைக்கேற்ற உற்பத்திமுறை


General Studies-III:

Topic : Major crops cropping patterns in various parts of the country, different types of irrigation and irrigation systems storage, transport and marketing of agricultural produce and issues and related constraints; e-technology in the aid of farmers


Expected Question:  
1.Saddling private sector with the burden of MSP will hurt the interest of both the farmers and the industry. Critically analyze.(250 words)

கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்.
contact mail ID  tnpscprime@gmail.com



கட்டுரை எண்- 1


நன்றி : இந்து தமிழ்


விலையோடு முடிவதில்லை விவசாயிகளின் பிரச்சினைகள்

 

விவசாயிகளின் போராட்டங்கள் எதுவென்றாலும் பிரதானமாக இருப்பது, ‘சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்பதாகும். சுவாமிநாதன் குழு என்று அறியப்படும் தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகள் என்று சுட்டிக்காட்டப்படுவது
‘குறைந்தபட்ச ஆதரவு விலையானது ஒட்டுமொத்த செலவு மற்றும் அந்தச் செலவில் 50% சேர்த்து நிர்ணயம் செய்வது’ என்பதாக மட்டுமே இருக்கிறது. இன்றைக்கு விவசாயிகள் போராடும் பல்வேறு கோரிக்கைகளையும் அலசி ஆராய்ந்து அவற்றுக்கும் ஆலோசனைகளை தேசிய விவசாயிகள் ஆணையம் தந்துள்ளது.
நாட்டில் விவசாயத்தில் நெருக்கடி மிகுந்தும் அதன் காரணமாக விவசாயிகளின் தற்கொலைகள் அதிகமாகவும் இருந்த காரணத்தினால் இந்திய அரசால் 2004-ல் பேராசிரியர் சுவாமிநாதன் தலைமையில் எட்டுப் பேர் கொண்ட தேசிய விவசாயிகள் ஆணையம் அமைக்கப்பட்டது. 20 மாநிலங்களில் விவசாயிகளோடும் வேளாண் மற்றும் ஏனைய அறிவியல் அறிஞர்களோடும் கலந்துரையாடி இந்த ஆணையம் தனது பரிந்துரைகளைக் கொடுத்தது. அந்தப் பரிந்துரைகள் 5 அறிக்கைகளாக 2004 முதல் 2006 வரை வெளியிடப்பட்டது. இதன் இறுதி அறிக்கை அக்டோபர் 2006-ல் மைய அரசிடம் கொடுக்கப்பட்டது.


தேவைக்கேற்ற உற்பத்தி
ஆணையத்தின் பரிந்துரைகளாவது, நிலச் சீர்திருத்த சட்டங்களின் மூலம் கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களை, நிலமற்ற விவசாயிகளிடம் பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் மற்றும் காடுகளின் மீதான மலைவாழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் முக்கியத்துவத்தை விவரிக்கின்றது. மிக முக்கியமாக, நில உபயோக ஆலோசனை நிலையத்தோடு இணைந்து செயல்படுவதன் மூலம், தட்பவெப்ப நிலைக்கேற்ற, சந்தையின் செயல்பாடுகளுக்கேற்ற பயிர்கள் பயிரிடப்படுவதைக் கிராம அளவில் உறுதிசெய்ய முடியும்.
சர்வதேச வர்த்தக நிறுவனம்போல, இந்திய அளவில் இந்திய வர்த்தக நிறுவனம் (ஐடிஓ) என்ற ஒன்று இந்திய அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் முக்கிய வேலை என்பது, சந்தை நிலவரங்களை ஆராய்வது, எந்தெந்தப் பயிர்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும், எவற்றில் தேவையைவிட குறைந்திருக்கும், அவ்வாறு இருப்பின் சந்தை விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது போன்ற ஆய்வினை மேற்கொள்வது. அதாவது, ஐடிஓ மற்றும் தேசிய நில உபயோக ஆலோசனை சேவை மையம் இரண்டும் இணைந்து செயல்படுத்துவதன் மூலம், வேளாண் பொருட்கள் உரிய விலையில் கிடைப்பதை உறுதிசெய்வதோடு, ‘தேவைக்கேற்ற உற்பத்தி’யைக் கொண்டு விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும் வழிவகை செய்கின்றது.
விவசாயிகளை உள்ளடக்கிய ஆராய்ச்சி
மற்றொரு முக்கியமான பரிந்துரை, விவசாயிகளை உள்ளடக்கிய வேளாண் ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும் என்பதாகும். அதாவது, வேளாண் தொடர்பான ஆராய்ச்சிகளில் விவசாயிகளின் கருத்துகள் மற்றும் தேவைகள் கேட்டறியப்பட்டு, அதற்கேற்ப ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதோடு, ஆராய்ச்சி முடிவுகளைக் களத்துக்குக் கொண்டுசெல்லும் விவசாய அறிவியல் நிறுவனங்களில் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் தொடர்பான ஒரு துறை இருக்க வேண்டும். இதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் மாற்றங்கள் செய்வதன் மூலம் எவ்வாறு அதிகபட்ச விலையை விவசாயிகளுக்குத் தருவதென்பதைக் கண்டறிய முடியும்.
ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் மண் வள அட்டை தரப்பட வேண்டும். இந்த அட்டையில், அந்தந்த குடும்பத்திடம் உள்ள விவசாய நிலங்களின் அறிவியல் தன்மைகள் (மண் கட்டுமானம், பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகள், மண்புழுக்களின் அளவு) விவரிக்கப்பட வேண்டும். எனவே, இதன் அடிப்படையில் பயிர்கள், இடுபொருட்கள் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். தேர்ந்த பயிர் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு விவசாயிக்கும் கிடைக்க, ஒவ்வொரு கிராமத்துக்கும் ஊரகத் தகவல் மையம் அமைக்கப்பட வேண்டும். இந்த மையங்கள், வட்டார அளவில் உள்ள ஊரக வள மையத்தோடு இணைந்து விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களைக் கொண்டுசேர்க்கும்.
விவசாயக் கடன்களைப் பொறுத்தமட்டில் எல்லோருக்கும் நிறுவனக் கடன்கள் சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் கொள்ளை வட்டியில் தரப்படும் தனியார் கடன்களை விவசாயிகள் பெறுவதைத் தவிர்க்க முடியும். மேலும், நிறுவனக் கடன்கள் 4% வட்டியில் விவசாயிகளுக்கே தரப்பட வேண்டும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்கள் உரிய நேரத்தில் அரசாங்கத்தின் மூலம் கொள்முதல் செய்தல் அவசியம். இதற்கான கொள்முதல் நிலையங்கள் போதிய அளவில் இருப்பதையும், அவை சரியான சமயத்தில் செயல்படுவதையும் அரசு உறுதிசெய்ய வேண்டும்.. குறிப்பாக, விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது விவசாயிகளின் அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கியதோடு அதிலிருந்து 50% சேர்த்து நிர்ணயம் செய்ய வேண்டும்.
இதுமட்டுமல்ல, விளைவிக்கப்படும் ஊட்டச்சத்துமிக்க பொருட்களுக்கான சந்தைகளை உறுதிசெய்யும் விதமாக, பொதுவிநியோகத் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும். அதாவது, அரிசி மற்றும் கோதுமை மட்டுமல்லாது சிறுதானியங்கள் மற்றும் ஏனைய ஊட்டச்சத்து மிக்க விளைபொருட்களையும் விநியோகத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
வளங்குன்றாத வேளாண் நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் காரணிகள், தகவல் தொழில்நுட்பங்களை செம்மையாகப் பயன்படுத்துவது, பெண்களுக்கான பங்கினை உறுதிசெய்வது, பாரம்பரிய அறிவு மற்றும் விவசாய முறைகளைக் கண்டறிந்து பாதுகாப்பதென விவசாயிகளின் மேம்பாட்டுக்கான பல்வேறு ஆலோசனைகளைத் தேசிய விவசாயிகள் ஆணையம் கூறியுள்ளது. அதைக் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற ஒற்றைப் பரிந்துரைக்குள் சுருக்கிவிடக் கூடாது.


- ஆர்.கோபிநாத், 
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

  Topic: UPSC in TAMIL ( Mains) Answer Writing Practice



கட்டுரை எண்- 2 



நன்றி : இந்து தமிழ்



இந்த ஆண்டிற்கான குறுவை பருவத்தின் 14 விவசாய உற்பத்திக்கு பொருளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிவிப்பு வழக்கமானதுதான் என்ற போதிலும், இந்த ஆண்டின் அறிவிப்பு கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது. விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு உயர்த்துவதற்கான மத்திய அரசின் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆதரவு விலையில் உற்பத்திச் செலவுடன் 50% சேர்த்து 150% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது!
இதை வரவேற்கும் அதே சமயத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலையினால் மட்டுமே பெருவாரியான பயன்கள் விளைவதில்லை என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.  அதாவது, சந்தை விரிவாக்கம் மற்றும் சந்தைகளை செம்மைப்படுத்துதல், விற்பனைக்கு ஏதுவாக போக்குவரத்து மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள், பொருள் விற்பனைக்குத் தேவையான தகவல்களை விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் அளிப்பது  மற்றும் சரியான முறையில், சரியான தருணத்தில் விளை பொருள்களை அரசாங்கமே கொள்முதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை செய்தால்தான்  குறைந்த பட்ச ஆதரவு விலையின் பயனை விவசாயிகள் பெற முடியும் என்பது அவர்களின் வாதம்.
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச விலையை உயர்த்தி அறிவிப்பதன் மூலம், பொருளாதாரத்தில் வேறு சில பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.  அதில் முக்கியமான ஒன்று, உணவுப் பொருட்களின் விலை ஏற்றம்! இந்த விலை ஏற்றம் என்பது ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கக்கூடியது. இருப்பினும், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை மட்டுப்படுத்த உணவு பொருட்களை வாங்கி விநியோகிப்பதில் அரசாங்கத்தின் தலையீடு தேவையாகிறது.
சந்தை விலை குறைந்த பட்ச ஆதரவு விலையை விட குறையும்போது, அரசாங்கம் கூடுதலாக செலவிட்டு உணவுப்பொருளை வாங்கி குறைந்த விலைக்கு விநியோகிக்க வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் அதிகப்படியான நிதிச் சுமையை வரி செலுத்தும் சாதாரண மக்களே ஏற்க வேண்டும்.  ஆகவே, குறைந்த பட்ச ஆதரவு விலை உயரும்போது அது சாதாரண நுகர்வோரையும் மற்றும் வரி செலுத்துவோரையும் கணிசமாக பாதிக்கச் செய்கிறது!
குறைந்த பட்ச ஆதரவு விலை உயரும்போது ஏற்படும் மற்றொரு பொருளாதார பாதிப்பு, மிகை உற்பத்தி! ஒரு பொருளின் விலை உயரும்போது, உற்பத்தியாளர் அந்த பொருளை அதிகப்படியாக உற்பத்தி செய்வார். ஒவ்வொரு உற்பத்தியாளரும் இதைப் பின்பற்றும் பட்சத்தில் தேவைக்கதிகமான உற்பத்தி நடைபெறும்! இதனால் அப்பொருளின் விலை கணிசமாக வீழ்ச்சி அடையும். இதனால் நஷ்டம் ஏற்படவாய்ப்புகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக நமது விவசாய பெருமக்கள் பாதிக்கப்படுவது மிகை உற்பத்தியினால் ஏற்படும் விலை வீழ்ச்சியினாலேயே! மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளை ஆதரவு விலை சார்ந்த பயிர்களையே பயிர் செய்யத் தூண்டுவதால் பயிரிடுதலின் பன்முகத் தன்மை பாதிக்கப் படுகிறது! இதன் மூலம், ஒரு சில பயிர்கள் மிகை உற்பத்தி மற்றும் விலைச்சரிவையும் வேறு சில பயிர்கள் குறைந்த உற்பத்தி மற்றும் அதிகப்படியான விலையையும் சந்திக்க நேரிடுகிறது!
குறைந்த பட்ச ஆதரவு விலை கொண்ட பயிர்களில், நெல் மற்றும் கரும்பு பயிர்கள் முக்கியமானவை. இப்பயிர்கள் அதிக நீரை உட்கொள்ளும் பயிர்களாதலால், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது போன்ற நிகழ்வுகள் நடை பெற்று சமூக பொருளாதார இழப்பிற்கு வழிகோலுகிறது!
குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப் பட்டபோதிலும், அது சரியாக நடைமுறைப் படுத்தப்படாதது விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றமாகவே உள்ளது! குறிப்பாக, பெருவாரியான விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி போதிய விழிப்புணர்வே இல்லாமல் உள்ளனர். ஆராய்ச்சி கட்டுரைகளின் முடிவுகளின்படி, 7 சதவீதத்திற்கு குறைவான விவசாயிகளே குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி அறிந்துள்ளனர் என்பது வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது!
இவ்வாறு இருப்பின், விவசாயிகள் எப்படி குறைந்த பட்ச ஆதரவு விலை கொண்ட பயிர்களை மிகை உற்பத்தி செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது. ஒருசில விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட பயிரை பயிர் செய்யும்போது, அதையே மற்ற விவசாயிகளும் பின்பற்றுவது இதற்கு ஒரு காரணமாக அமையும்.
சில பயிர்களை பொறுத்தவரை, விவசாயிகள் சமீபத்திய அல்லது நடப்பு விலையை பின்பற்றியே தங்களது பயிர் செய்யும் முடிவை மேற்கொள்கிறார்கள் என்பது கண்கூடு. உதாரணமாக, தக்காளி அல்லது வெங்காயம் அதிக விலைக்கு விற்கும்போது பெருவாரியான விவசாயிகள் வரும் போகத்தில் இந்த பயிர்களையே பயிரிட விழைவர்.
ஆனால், அறுவடை காலத்தில் மிகை உற்பத்தியினால் விலை சரிந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். அடுத்த போகத்தில் பெருவாரியான விவசாயிகள் இப்பயிர்களை கை விட்டு வேறு பயிர்களுக்கு தாவும்போது, வெங்காயம் மற்றும் தக்காளியின் உற்பத்தி குறைவதால் அவற்றின் விலை பெரு வாரியாக உயரும். விவசாயிகள் இப்போதும் ஏமாற்றத்தை உணருவர்.
இப்போது, மறுபடியும் இந்த பயிர்களுக்கு பெருவாரியான விவசாயிகள் தாவும்போது அறுவடை காலத்தில் அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்து மறுபடியும் நஷ்டம் ஏற்படும்! இது பன்னெடுங்காலமாக ஒரு சுழற்சியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு சில பொருட்களின் விலை அதிகமாகும்பொழுது, விவசாயிகளிடம் அப்பொருட்கள் இருப்பதில்லை! அப்பொருட்கள் அவர்களிடம் இருக்கும்போது, அவர்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை!
இந்திய விவசாய துறையில் ஏற்படும் பெருவாரியான பிரச்சினைகளுக்கு விவசாய பொருட்களின் விலையே முக்கிய காரணமாக அமைகிறது. அந்த விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதன்மூலம், விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் வாழ்வில் ஒருங்கே விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டு வர முடியும்! அது எவ்வாறு சாத்தியம்?
தனியார் ஒப்பந்த விவசாயத்தில் உள்ள முக்கிய கூறுகள் விவசாயத் துறையில் விலையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அளிக்கின்றன. ஒப்பந்த விவசாயத்தில் தேவைக்கேற்ற உற்பத்தியை பயிர் செய்வதற்கு முன்னரே நிர்ணயம் செய்கின்றனர்.
ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் பயிருக்கான கொள்முதல் விலையும் பயிர் செய்வதற்கு முன்னரே நிர்ணயம் செய்யப்படுவதால், அறுவடை காலத்தில் ஏற்படும் விலை வீழ்ச்சி அல்லது அதிகப்படியான விலை ஏற்றம் என்பதற்கான வாய்ப்பே இல்லை. ஆக, பயிர் செய்வதற்கு முன்பே எதிர்காலத்திற்கான விலை சமன் செய்யப்படுவதால் விவசாயி மற்றும் வாங்குபவர் இருவரும் மிக்க பயனடைகின்றனர்.
ஆனால், தற்போதைய இந்திய விவசாயம் தேவையையும் உற்பத்தியையும் நிகராக ஆக்கி விலையை சமன் செய்யும் தன்மையைக் கொண்டதாக இல்லை! உற்பத்தி செய்தபின், எந்த சந்தையில் அதிக விலை கிடைக்கும் என்பதற்கான தகவல்களை விவசாயிகளுக்கு அளிக்க ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றனவே தவிர, பயிர் செய்வதற்கு முன்னரே தேவைக்கேற்ப எவ்வாறு உற்பத்தியை நிர்ணயிப்பது என்பது பற்றிய நடவடிக்கைகள் நம்மிடம் இல்லை! தேவைக்கேற்ப உற்பத்தியே விலையை நீண்டகால அடிப்படியில் சமன் செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வல்லது!
மேற்சொன்ன பரிந்துரையை சாத்தியமாக்க, முதலில் நாம் ஒவ்வொரு விவசாய பொருளுக்குமான தேவையை ஒவ்வொரு பருவத்திற்குமோ அல்லது ஒவ்வொரு ஆண்டுக்குமோ கணக்கிடவேண்டும். உதாரணமாக, அரிசிக்கான ஒரு ஆண்டின் மொத்த தேவையை மக்கள் தொகை மற்றும் அரிசி ஏற்றுமதி/இறக்குமதி ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட முடியும். இதுபோல், ஒவ்வொரு முக்கியமான வேளாண் விளை பொருளுக்குமான தேவையை சராசரியாக கணக்கிட வேண்டும். 
ஒவ்வொரு வேளாண் பொருளுக்கான தேவையை கணக்கிட்ட பின், ஒவ்வொரு பொருளும் எவ்வளவு உற்பத்தி செய்யப்படும் என்பதை கணக்கிட வேண்டும். இது சற்று கடினம். கிராமம் தோறும் விவசாயிகளிடம் ஒரு சிறிய கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் இதை நிர்ணயிக்கலாம்.
அதாவது, ஒவ்வொரு விவசாயியிடமும் ஒவ்வொரு பருவத்திற்கு முன்பும் (இரண்டு மாதங்களுக்கு முன்பு) இரண்டு கேள்விகள் கேட்கவேண்டும்:
1) வரும் பருவத்தில், என்ன பயிர்கள் செய்வீர்கள்?; மற்றும்,
2) எவ்வளவு ஏக்கரில் இந்த பயிர்களை செய்வீர்கள்? இந்த இரண்டு கேள்விகளிலிருந்தும், எவ்வளவு விவசாயிகள், எவ்வளவு ஏக்கரில் என்ன பயிர் செய்யப்போகிறார்கள் என்பதை கணக்கிடுவதன் மூலம் ஒவ்வொரு பயிரும் வரவிருக்கும் பருவத்தில் அல்லது ஆண்டில் எவ்வளவு உற்பத்தி செய்யப்படும் என்பதை சுலபமாக கணக்கிட முடியும்.
விவசாயிகளிடமிருந்து இந்த தகவல்களை பெற, முன்னரே உள்ள கட்டமைப்பு வசதிகள் போதுமானது. உதாரணமாக, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கிராம நிர்வாக அதிகாரி இந்த தகவல்களை மிக சுலபமாக திரட்ட முடியும்! ஒவ்வொரு பயிரின் வருங்கால உற்பத்தியையும், முன்னரே கணக்கிடப்பட்ட தேவையுடன் ஒப்பிடும்போது எந்தப் பயிர் தேவைக்கு அதிகமாக மற்றும் எந்த பயிர் தேவைக்குக் குறைவாக உற்பத்திசெய்யப்படும் என்பதை அறிய முடியும்.
இதிலிருந்து எந்தப் பயிரின் விலை வீழ்ச்சி அடையும் அல்லது எந்தப் பயிரின் விலை அதிகப்படியாக உயரும் என்பதை பயிர் செய்வதற்கு முன்கூட்டியே கணக்கிட முடியும்.
இதனடிப்படையில், விவசாயிகளிடம் மிகை உற்பத்தி பயிர்களை தேவைக்கேற்ப குறைத்தும், குறைந்த உற்பத்தி பயிர்களை தேவைக்கேற்ப அதிகரித்தும் பயிர் செய்ய பரிந்துரைப்பதன் மூலம் தேவைக்கேற்ற உற்பத்தி செய்து, விலையை நீண்ட கால அடிப்படையில் சமன் செய்து விவசாயிகளையும் நுகர்வோர்களும் ஒருசேர ஏற்றமடையச் செய்யலாம்! இங்கே, வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் அரசின் புள்ளி விவர மையங்கள் விவசாய அமைப்புகளுடன் சேர்ந்து விவசாயிகளின் தேவைக்கேற்ப பயிரிடும் முறையில் சீர் திருத்தம் கொண்டு வருவதில் ஒரு பெரும் பங்காற்ற முடியும்.
குறுகிய காலத்தில் தேவை, உற்பத்தி மற்றும் விலையைக் கணக்கிடுவதில் சில குறைகள் இருப்பினும், தொடர்ந்து இவற்றை கணக்கிடும் பட்சத்தில் கணக்கிடுதலில் ஏற்படும் தவறுகளைக் களைந்து நீண்ட கால அடிப்படையில் துல்லியமான கணக்கீடுகளை தருவிக்க முடியும்! இந்த அணுகுமுறையே, வருகாலங்களில் விவசாயிகளையும் மற்றும் விவசாயத்தையும் காக்க வல்லது!

Topic: UPSC in TAMIL ( Mains) Answer Writing Practice

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN