இந்தியாவின் கரும்பு ஆலைகள்

General Studies-III:


Topic – Issues related to direct and indirect farm subsidies and minimum support prices

Expected Question for UPSC  exam (Tamil): 


1.India’s sugarcane woes seems to be a recurrent theme. Examine the challenges associated with this industry which has led to the crisis? Also examine whether the steps taken by the government would mitigate the industry’s woes?


#UPSCTAMIL

இந்தியாவின் கரும்பு ஆலைகள்  நஷ்டத்திற்குள்ளாவது மீண்டும் மீண்டும் நடப்பதாக உள்ளது.நெருக்கடிக்கு வழிவகுத்த இந்தத் தொழில்துறை தொடர்புடைய சவால்களை ஆராய்க?அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொழில் இன்னல்களை குறைக்கிறதா என்பதை ஆராய்.



2.The crises of sugar industry provides an opportunity for bolder reforms that those undertaken by the government, to permanently resolve the issues faced by sugar industry. Critically examine.


சர்க்கரைத் தொழிலின் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், சர்க்கரைத் தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்க அரசாங்கத்திற்கு துணிச்சலான முடிவை எடுக்க வாய்ப்பை வழங்குகிறது.விமர்சன ரீதியாக ஆய்வு செய்.

கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் . 


contact mail ID  tnpscprime@gmail.com



நன்றி : தமிழ் ஹிந்து



கட்டுரை எண் : 1

கடும் நெருக்கடியில் கரும்பு விவசாயம்: விவசாயிகள் - சர்க்கரை ஆலைகள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?


நாடு முழுவதும் கரும்பு விவசாயம் வரலாறு காணாத நெருக்கடியில் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கும் சர்க்கரை ஆலைகளுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசு தீர்வு காணுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்க்கரை உற்பத்தியில்
உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் உலக அள வில் கரும்பு விளைச்சல் அபரிமித மாக அதிகரித்திருப்பதால் சர்க் கரை விலை கடும் சரி வைச் சந்தித்துள்ளது. இத னால், நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆலை உரிமை யாளர்களும், நிலுவைத் தொகை கிடைக்காததால் கரும்பு பயிரிடு வதையே நிறுத்திவிடுவோம் என விவசாயிகளும் பரஸ்பரம் குறைகூறி வருகின்றனர்.


Image result for SUGARCANE INDUSTRIES

இதுகுறித்து ‘தி இந்து’விடம் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் தலைமை இயக்குநர் அபினாஷ் வர்மா கூறியதாவது:
நாடு முழுவதும் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.19 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.5,900 கோடி அதிகரித்துள்ளது. ஆலைகளிடம் கையிருப்பில் உள்ள சர்க்கரையை உற்பத்தி விலைக்கு அரசு கொள்முதல் செய்தால்கூட ரூ.900 கோடி அளவுக்கே நிலுவைத் தொகையை வழங்க முடியும்.
சர்க்கரை விலைக்கு ஏற்ப கரும்புக்கு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என அரசு நினைத்தால் நேரடி மானியம் வழங்க வேண்டும். அரசு நிர்ணயிக்கும் விலையை வழங்கினால் ஆலைகளை நடத்த முடியாத நிலை ஏற்படும் என்றார்.
தமிழ்நாடு கரும்பு உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் தலைவர் புண்ணியமூர்த்தி கூறும்போது, ‘‘சர்க்கரையைப் பற்றி பேசும் ஆலை முதலாளிகள் எத்தனால், எரிசாராயம், மின்சாரம், காகிதம், உரம் ஆகியவற்றில் கிடைக்கும் லாபம் பற்றி பேசுவதில்லை. தமிழகத்தில் 18 அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், 20 தனியார் ஆலைகளும் உள்ளன. மேலும் 2 ஆலைகளுக்கு அனுமதி கேட்டுள்ளனர். நஷ்டம் என்றால் இத்தனை ஆலைகள் எதற்கு?
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமானால் சர்க்கரை இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். இறக்குமதிக்கு மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும். ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்காக ஆலைகளுக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு வட்டியில்லா கடனாக ரூ.7,000 கோடி வழங்கியது. ஆனாலும், நிலுவைத் தொகையை வழங்க மறுக்கிறார்கள்’’ என குற்றம்சாட்டினார்.
‘‘கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம். கொடுத்த கரும்புக்கு பணம் கிடைக்க ஆண்டுக்கணக் கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலை நீடித்தால் கரும்பு விவசாயத்தையே கைவிட வேண்டியிருக்கும்’’ என்று வேத னையுடன் தெரிவித்தார் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி சிவானந்தம்.
விவசாயிகளின் குற்றச்சாட்டு கள் குறித்து தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத் தலைவர் பழனி பெரியசாமியிடம் கேட்டபோது, ‘‘எப்போதும் இல் லாத அளவுக்கு சர்க்கரை உற்பத்தி அதிகரித்திருப்பதால் விலை சரிந்துள்ளது. வாட் வரி அதிகமாக இருப்பதால் எத்தனால், எரிசாராயம் ஆகியவற்றில் லாபம் இல்லை. ஆலைகள் தயாரிக்கும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு ரூ.3.15 முதல் ரூ.4.27 வரைதான் கொடுக்கின்றனர். இந்த உண்மை கள் விவசாயிகளுக்கும் தெரியும். இது சர்க்கரைத் தொழிலுக்கு மோச மான காலகட்டம். விவசாயிகள் இல்லையெனில் ஆலைகள் இல்லை. எனவே, விவசாயிகளை ஏமாற்றும் எண்ணம் ஆலைகளுக்கு இல்லை’’ என்றார்.
சர்க்கரை விலைக்கு ஏற்ப கரும்புக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது ஆலைகளின் கோரிக்கை. கட்டுப்படியாகும் விலை உடனடியாக வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இதற்கு அரசு எப்படி தீர்வு காணப்போகிறது என்பதைப் பொறுத்துதான் கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரைத் தொழிலின் எதிர்காலம் உள்ளது.
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமானால் சர்க்கரை இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்.


கட்டுரை எண் : 2


சர்க்கரை ஆலைகள் பெற்ற கடன்களுக்கு வட்டி மானியம் வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்


தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு, மத்திய அரசின் புதிய சலுகைகளை அளிப்பதுடன், கடன்களுக் கான வட்டி மானியம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந் திர மோடிக்கு தமிழக முதல்வர்கே.பழனிசாமி நேற்று கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு சமீபத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு சில சலுகைகளை அறிவித்தது. அதில் எந்த ஒரு சலுகையையும் தமிழக சர்க்கரை ஆலைகள் பெறவில்லை.
தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் கடும் நிதி நெருக்கடி யில் உள்ளதால், லட்சக்கணக் கான விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சிறப்பு இனமாக கருதி, தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு சலுகை வழங்க வேண்டும். குறிப்பாக, மாநிலத்தின் ஆண்டு சர்க்கரை தேவை 15 லட்சம் மெட்ரிக் டன்னாகும். ஆனால் இங்கு 5 லட்சத்து 80 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, இருப்பு வைத்துக்கொள்ளும் அளவு தொடர்பான கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு, குறைந்தபட்ச நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி அளவு 14.16 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு 5.82 சதவீதமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதிக்கான விலை ஒரு கிலோ ரூ.19 ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பது, மாநில சர்க்கரை ஆலைகளுக்கு மிகுந்த இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, குறைந்த பட்ச ஏற்றுமதி அளவில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
சர்க்கரை ஆலைகள் மிகுந்த நிதி நெருக்கடிக்கு இடையில், அதிக வட்டிக்கு கடன் பெற்று, விவசாயிகளுக்கு நியாயமான ஆதாய விலையை வழங்கி வருகின்றன. எனவே, இதை சிறப்பு இனமாக கருதி, கடந்த 2017-18ல் பெற்ற கடன்களுக்கான வட்டி மானியம் அளிக்க வேண்டும். கரும்பு உற்பத்திக்கு குவின்டால் ஒன்றுக்கு ரூ.5.5 உற்பத்தி மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை, தமி ழக கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.


கட்டுரை எண் : 3

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்காத சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டும்: ராமதாஸ்


கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1,347 கோடி நிலுவைத் தொகையை வழங்காத சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1,347 கோடி நிலுவைத் தொகையை தர முடியாது என்று கைவிரித்து விட்டதாக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் பினாமி அரசு மது விற்பனை, மணல் கொள்ளை தவிர வேறு எதற்கும் லாயக்கற்ற அரசு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1,347 கோடி, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ரூ.236 கோடி என மொத்தம் ரூ.1,583 நிலுவைத் தொகை வைத்துள்ளன. இவற்றை வசூலித்துத் தருவதாக கடந்த இரு ஆண்டுகளாக தமிழக அரசு கூறி வரும் போதிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை தீபாவளி பண்டிகைக்குள் வழங்கப்பட்டு விடும்; பொங்கலுக்குள் வழங்கப்படும்; ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்று தொழில்துறை அமைச்சர் சம்பத் பலமுறை தவணை கூறி விட்டாலும் இதுவரை ஒரு பைசா கூட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.
விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை விரைவில் பெற்றுக் கொடுத்து விடுவோம் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில், இந்த விஷயத்தில் அரசின் தோல்வியை வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். “நானும், தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்தும், மின்துறை அமைச்சர் தங்கமணியும் சேர்ந்து சர்க்கரை ஆலை அதிபர்களிடம் 10 முறைக்கு மேல் பேச்சு நடத்திவிட்டோம். ஆனால், சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதால் நிலுவைத்தொகை வழங்க முடியாது என்று அவர்கள் கூறி விட்டனர்” என்று அமைச்சர் துரைக்கண்ணு ஆட்சியாளர்களின் கையாலாகாதத்தனத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். கரும்பு விவசாயிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய தொகையை வழங்கும்படி 10 முறை அமைச்சர்கள் பேச்சு நடத்தியும், அதை சர்க்கரை ஆலைகள் ஏற்க மறுத்தால் அதை விட பெரிய அவமானம் எதுவும் அரசுக்கு இல்லை.
விவசாயிகளை ஏமாற்றுவது மட்டுமின்றி, அரசின் ஆணைக்கும் கட்டுப்பட மறுக்கும் சர்க்கரை ஆலைகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யும் துணிச்சலும் ஆட்சியாளர்களுக்கு இல்லை. எனவே, சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்தது போலவும் இருக்க வேண்டும்; அந்த நடவடிக்கையால் சர்க்கரை ஆலைகள் பாதிகப்படாமலும் இருக்க வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள இரு தனியார் சர்க்கரை ஆலைகளின் கிடங்குகளை தமிழக அரசு மூடி முத்திரையிட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை; இதுவும் ஒரு ஏமாற்று வேலை என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும்.
உதாரணமாக, தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியில் செயல்பட்டு வரும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ரூ.30.76 கோடி நிலுவை வைத்துள்ளது. அந்த ஆலைக்கு சொந்தமான கிடங்கில் பல்லாயிரம் டன் சர்க்கரை இருப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆலை மூடி முத்திரையிடப்படவுள்ள செய்தி ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்தே ஆலை நிர்வாகத்துக்கு கசியவிடப்பட்டதால் பெரும்பாலான மூட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. இதனால் கிடங்குக்கு முத்திரையிட்ட போது, அதில் ரூ.4 கோடி மதிப்புள்ள சர்க்கரை மட்டுமே இருந்தது. இது ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் 13% மட்டுமே. அதேபோல், கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் அமைந்துள்ள அம்பிகா சர்க்கரை ஆலை ரூ.60 கோடி நிலுவைத்தொகை வைத்துள்ள நிலையில் அங்கிருந்து ரூ.25 கோடி மதிப்புள்ள சர்க்கரை மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகள் நட்டத்தில் இயங்குகின்றன என்ற பொய்யை உண்மையாக்கி, ஆலை நிர்வாகங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் இருப்பதற்காகவே இத்தகைய நாடகங்களை தமிழக ஆட்சியாளர்கள் அரங்கேற்றுகின்றனர். இதை விவசாயிகள் நம்ப மாட்டார்கள்.
தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பிலிருந்து மின்சாரம், உரம், காகிதம், எத்தனால் போன்ற பொருட்களை தயாரித்தாலும், அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயை பதுக்கிக் கொண்டு சர்க்கரை விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை மட்டும் வரவு வைத்து நட்டக் கணக்கு காட்டுகின்றன. இந்த மோசடிகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் மொத்தமாக கிடைத்து விடுவதால் ஆலைகள் நடத்தும் மோசடிகளை கண்டுகொள்ள மறுக்கிறார்கள். விவசாயிகளுக்கு இன்று வரை நிலுவை கிடைக்காததற்கு காரணமே ஆட்சியாளர்களின் துரோகம் தான்.
தமிழக ஆட்சியாளர்களுக்கு உண்மையாகவே விவசாயிகள் மீது அக்கறை இருந்திருந்தால் சர்க்கரை கிடங்குகளை மூடியிருக்கக் கூடாது. மாறாக ஆலைகளையே மூடி அவற்றை அரசுடைமையாக்கியிருக்க வேண்டும். ஆனால், ஆலைகளிடமிருந்து தங்களுக்கு கிடைக்கும் வருமானம் தடைபடக்கூடாது என்பதற்காக அதை செய்ய அரசு மறுக்கிறது. ஆனால், அரசின் உத்தரவையே ஆலைகள் செயல்படுத்த மறுத்து விட்ட நிலையில் அவை அனைத்தையும் அரசுடைமையாக்கி பொறுப்பான அதிகாரிகளை நியமித்து இயக்க வேண்டும். ஆலைகள் கணக்கில் உள்ள லாபத்தில் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கவேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்


கட்டுரை எண் : 4


வேப்பங்காயாக மாறிய சர்க்கரை!


ஒன்றை சார்ந்து இன்னொன்று இயங்கும் வகையில் அல்லது ஒருவரைச் சார்ந்து இன்னொருவர் இயங்கும் வகையில் சார்பியல் அமைப்பாக நமது சமூகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தனித்த நிலைமை என்பது இங்கு சாத்தியம் இல்லாத ஒன்று. சார்ந்தியங்குவது தடைபடும்போது மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாத ஒட்டுமொத்த முடக்கம் ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை `டெட்லாக்’ என்று சொல்கிறார்கள்.
இந்திய சர்க்கரை துறைக்கு ஏற்பட்டிருக்கிற தற்போதைய நிலையை அத்தகையதொரு டெட்லாக் என்று சொல்லலாம். சர்க்கரை ஆலைகளுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் இடையேயான சார்ந்தியங்கும் தன்மை பாதிக்கப்பட்டதால் இந்தப் பிரச்சினை இந்த நிலையை எட்டியிருக்கிறது. இந்த நிலையிலிருந்து சர்க்கரைத் துறையை மீட்டெடுக்கும் பொருட்டு ஜூன்-6 அன்று ரூ.8,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது அரசு. ஆனால் இதனால் விவசாயிகளுக்கோ, கரும்பு ஆலைகளுக்கோ முழுமையான பலன் உண்டா என்பது விவாதத்துக்குரியது.


என்ன பிரச்சினை?


இந்தியாவின் வருடாந்திர சராசரி சர்க்கரை தேவை 2.5 கோடி டன்னாக இருக்கிறது. ஆனால் 2017-2018 சாகுபடி காலத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 3.15 கோடி டன்னாக இருந்தது. விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்தார்கள். இது சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தேவையை விட அதிக அளவில் ஒரு பொருளை தயாரிக்கும்பொழுது, அந்தப் பொருள் எளிதாக கிடைத்து விடுகிறது. அதனால் அதிக விலை கொடுத்து மக்கள் அதனை வாங்கமாட்டார்கள். எனவே தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டதால் சர்க்கரையின் விலை குறைய ஆரம்பித்தது.
இதனால் விவசாயிகளிடம் இருந்து கரும்பை வாங்கிய சர்க்கரை ஆலைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. பொதுவாக விவசாயிகளிடம் இருந்து வாங்கிய கரும்புக்கான தொகையை 14 நாட்களுக்குப் பிறகுதான் சர்க்கரை ஆலைகள் கொடுப்பதாகத் தெரிகிறது. ஆனால் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகும் கொடுக்கவில்லை. இப்போது சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.22,000 கோடியாக உள்ளது. இது இந்த சாகுபடி ஆண்டின் இறுதிக்குள் ரூ.25,000 கோடியை எட்டும் என்று சொல்லப்படுகிறது.


அரசு நடவடிக்கைகள்


இந்த சிக்கலுக்கு முடிவு காணும் வகையில் விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கு உதவும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளுடன் மொத்தமாக ரூ.8,000 கோடியை ஒதுக்கியிருக்கிறது அரசு. முதலாவதாக சர்க்கரை ஆலைகளிடமுள்ள உபரி இருப்பை அரசே வாங்கி சேமிக்கும் வகையில் 30 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பகத்தை அரசு அமைக்க இருக்கிறது. உபரிக்கான பணத்தை விவசாயிகளிடம் நேரடியாக அரசு அளித்துவிடும் என்று கூறப்படுகிறது. சர்க்கரை வழியாக ஏற்பட்ட நஷ்டத்தை, எத்தனால் வழியாக ஈடுகட்டும் பொருட்டு, எத்தனால் பிரித்தெடுக்கும் உபகரணங்களை வாங்க மொத்தமாக ரூ.4,440 கோடி கடனை சர்க்கரை ஆலைகளுக்கு வழங்க இருக்கிறது அரசு.
அதுமட்டும் அல்லாமல் இந்தக் கடனுக்கான முதல் 5 ஆண்டு வட்டியான ரூ.1,332 கோடியை அரசே செலுத்த இருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கான குறைந்தபட்ச ஆலை கொள்முதல் விற்பனை விலையை கிலோவுக்கு ரூ.29-ஆகவும் உயர்த்தி அறிவித்திருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் சர்க்கரையை இருப்பு வைக்கக் கூடாது எனவும் சர்க்கரை ஆலைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
நாட்டில் மிக அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் உத்திரபிரதேச மாநில இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியைத் தழுவியிருக்கும் நிலையில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலை மனதில்கொண்டு இந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாய தேவை அரசுக்கு ஏற்பட்டது. காரணம் என்னவாக இருந்தாலும் இந்த நடவடிக்கையின் மூலமும் இந்திய சர்க்கரை துறை பெரிய அளவில் மாற்றமடையாது என்பதே துறைசார் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. ரூ.22,000 கோடி நிலுவைத் தொகையில் இந்த நடவடிக்கையின் மூலம் 40 சதவீதம் நிலுவைத் தொகை மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கும் என சொல்கிறது கிரிசில் அமைப்பின் சமீபத்திய ஆய்வு.
ஒரு கிலோ சர்க்கரை தயாரிப்பதற்கான உற்பத்தி விலை ஏறக்குறைய ரூ.35 என்ற அளவில் இருக்கும்போது ரூ.29-ஐ ஒரு கிலோவுக்கான குறைந்தபட்ச விற்பனை விலையாக நிர்ணயிப்பதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்பது சர்க்கரை ஆலை உரிமையாளர்களின் கருத்து. உற்பத்தி விலையை விடக் குறைவாக, குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்பதால் விவசாயிகளின் நிலுவைத் தொகை முழுமையாக எப்படி திரும்பி வரும் என்ற கேள்வி எழுகிறது.
பொதுத்தேர்தலுக்குள் விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையின் அளவை முன்பைவிட சிறிய அளவில் குறைப்பது, அதேவேளையில் சர்க்கரை சில்லறை விலையை கட்டுக்குள் வைத்திருப்பது என்று பொது மக்கள், விவசாயிகள் என இரு தரப்பினரையும் பகைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் இப்போதைக்கு அரசின் உத்தேசமாக இருக்கும் என்று தோன்றுகிறது.



தமிழகத்தின் நிலை


உத்திரபிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சர்க்கரை உற்பத்தி, தேவையை விட அதிகம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேவையான அளவு சர்க்கரை உற்பத்தியாவதில்லை என்கிறது தமிழக அரசு. இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இதில் உபரி சேமிப்பகம் அமைப்பது, எத்தனால் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவது, ரூ.29-ஐ குறைந்தபட்ச விற்பனை விலையாக நிர்ணயிப்பது போன்றவை கரும்பு விவசாயிகள் வறட்சியில் வாடும் தமிழகத்துக்கு பொருந்தாது, எனவே இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தமிழக அரசின் அறிவிப்புப்படி மொத்த விற்பனை இருப்பு 2.7 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், விவசாயிகளுக்கு அளிக்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.226.25 கோடியாகவும் உள்ளது. விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை, சர்க்கரை ஆலைகள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அளிப்பதாக முதல்வர் கூறுகிறார்.
ஆனால் சர்க்கரை மட்டுமல்லாது வெல்லப் பாகு, கரும்பு சக்கை போன்ற பல்வேறு உப பொருட்கள் மூலமும் சர்க்கரை ஆலைகள் லாபம் ஈட்டி வரும் நிலையில் அவற்றால் இந்த நிலுவைத் தொகையை தர முடியவில்லை என்று சொல்வது நம்பக்கூடியதாக இல்லை என்கின்றன விவசாய அமைப்புகள். கரும்பை தவறாக எடையிடுவது தொடங்கி, குறைந்த தொகையை கரும்புக்கு தருவதுவரை பல்வேறு முறைகேடுகள் ஆலைகளில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.


சிக்கல்கள்


கரும்பின் உற்பத்தி அதிகமாக இருக்கும் நிலையில் அவற்றை அதிக அளவில் ஏற்றுமதி செய்வது நல்ல திட்டமென்றாலும், துரதிர்ஷ்டவசமாக உலக அளவில் சர்க்கரை உற்பத்தி அதிக அளவில் இருப்பதால் சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை மிகக் குறைவாக உள்ளது. எனவே ஏற்றுமதி செய்வதிலும் பெரிய பயன்கள் இல்லாத சூழல் காணப்படுகிறது. முன்னதாக ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா மானியம் அளித்தபோது பிரேசில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கெனவே வீழ்ச்சியில் இருக்கும் சந்தையை இந்த மானியம் மேலும் மோசமாக்கிவிடும் என உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) முறையிட்டன. பின்பு ஏற்றுமதி சலுகைகளை இந்தியா விலக்கிக் கொண்டது. எனவே இத்தகைய நடவடிக்கையை மீண்டும் எடுக்க அரசு தயங்கும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்திவருகிறது. ஆனால் இதற்காக நிர்ணயித்துள்ள இலக்கை ஒரு ஆண்டில் கூட இந்தியா எட்டவில்லை.
மாநில அரசுகள் எத்தனால் மீது தங்கள் விருப்பத்துக்கேற்ப விதிக்கும் வரி மற்றும் மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் எத்தனால் தயாரிப்பு குறைவாக இருப்பது, எத்தனாலுக்கு போதிய அளவு விலை கிடைக்காதது போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்ந்துவரும் நிலையில் இது மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எத்தனால் பிரித்தெடுப்பு அமைப்புகளுக்கு அரசு கடன் வழங்குவது இந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.



என்ன தீர்வு?


கரும்புக்கான தொகை பிறகு கிடைத்தாலும் பரவாயில்லை, மற்ற பயிர்களைவிட இது அதிக லாபம் தருவதால் இதனைத் தொடர்ந்து பயிரிடுவோம் என்பது கரும்பை அதிகம் உற்பத்தி செய்யும் உத்திரபிரதேச விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது. எனவே இந்திய அளவில் கரும்பு உற்பத்தி வரும் சாகுபடி ஆண்டிலும் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. கரும்பு உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பதன் வழியாக குறைந்தபட்ச விற்பனை விலைக்குக் கூட சர்க்கரையை விற்க முடியாத நிலை ஏற்படும். இது நிலைமையை இன்னமும் மோசமாக்கும். உத்திரபிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருப்பு தீரும்வரை குறைந்த கால அளவுக்காவது கரும்பு உற்பத்தியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.
கரும்புக்கான விலையை போகிற போக்கில் முடிவு செய்வதை கைவிட்டு சர்க்கரையின் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. சர்க்கரையிலிருந்து கிடைக்கும் உப பொருட்களுக்கான லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு அளிக்கப்படவேண்டும் என்பதும் கவனிக்கத்தக்க கோரிக்கையே. இருப்பு தீரும்வரை சர்க்கரைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யாமல் சர்க்கரையை இயல்பாக விற்றுத் தீர்ப்பது, உற்பத்தியைக் குறைப்பது, உற்பத்தி குறைவின் காரணமாக விலை அதிகரிப்பது, விலையைக் குறைக்கும் வகையில் உற்பத்தியை சரியான அளவில் அதிகரிப்பது என்ற சுழற்சியின் மூலம் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்பது துறைசார் வல்லுநர்களின் கருத்து.
கரும்பு விவசாயிகளுக்கும், ஆலைகளுக்கும் இடையேயான உறவு முறையிலேயே பெரிய மாற்றங்கள் ஏற்பட வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட பகுதியிலுள்ள விவசாயிகள் அருகிலுள்ள ஆலைகளுக்குத்தான் கரும்புகளை விற்க வேண்டும் என்ற அரசின் நடைமுறையே இத்தகைய நல்ல உறவுகளையோ, நம்பிக்கையையோ விவசாயிகளுக்கும், ஆலைகளுக்கும் இடையே ஏற்படாமல் தடுத்துவிடுகிறது. ஒப்பந்த அடிப்படையில் தேவைக்கேற்ற உற்பத்தி, பயிரிடும்போதே ஒப்பந்தம் செய்துகொண்ட ஆலையிடமிருந்து நிதி உதவி என இந்த உறவு மேம்படும்போது சர்க்கரைத் துறை வேறொரு பரிணாமத்தை அடையும்.


கட்டுரை எண் : 5


சர்க்கரை கசக்கும்!


என்ன இது முரண்பட்ட தகவலாக இருக்கிறதே. சர்க்கரை இனிக் கத்தானே செய்யும் என நினைப்பீர்கள். உண்மையில் கடை நிலை நுகர்வோராக இருக்கும் நமக்கு சர்க்கரை இனிக்கத்தான் செய்யும். ஆனால் அதன் உற்பத்தி மூலப்பொருளான கரும்பை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சர்க்கரை கசக்கும். ஆம், கரும்பை நட்டு, பராமரித்து, அறுவடை செய்யும் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது.
உலகிலேயே பிரேஸிலுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கரும்பு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் கரும்பு அறுவடை சீசன் என்பது அக்டோபர் முதல் செப்டம்பர் வரையாகும்.
இந்தியாவில் மொத்தம் 453 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் கூட்டுறவு சங்கம் நிர்வகிப்பவை 252, தனியார் துறை வசம் 134, பொதுத்துறை வசம் 67 ஆலைகள் உள்ளன.
கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் அளிக்க வேண்டிய நிலுவை ரூ. 19,243 கோடி. அப்புறம் கரும்பு விவசாயிகளுக்கு அது எப்படி இனிப்பாக இருக்கும். அறுவடை செய்த பொருளின் பலன் பணமாக கையில் வந்தால்தானே இனிக்கும்.


முதலிடத்தில் உத்தரப் பிரதேசம்


இந்திய மாநிலங்களின் பரப் பளவில் மிகப் பெரியதான உத்தரப் பிரதேச மாநிலம்தான் கரும்பு விவசாயிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் அதிகம் பாக்கி வைத்துள்ளது. இந்த மாநிலம் மட்டுமே ரூ. 9,716 கோடியை விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையாக வைத்துள்ளது.
அதிக அளவிலான சர்க்கரை ஆலைகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிர மாநிலம் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை ரூ. 2,864 கோடி.
அண்டை மாநிலமான கர்நாடகமோ விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள தொகை ரூ. 2,402 கோடி.
சர்க்கரை விற்பனை விலையை விட உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதாக ஆலை அதிபர்கள் கூறுகின்றனர். ஆனால் கரும்பு பயிரிடும் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கரும்புக்கான விலை நிர்ணய விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு ஒரளவுக்குத்தான் இருக்க முடியும். இந்தப் பிரச்சினைக்கு மாநில அரசுகள்தான் தீர்வு காண முடியும். இருதரப்பினருக்கும் அதாவது விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கு கட்டுபடி யாகும் விலையை (எப்ஆர்பி) விட அதிகமாக மாநில அரசுகள் கரும்புக்கான கொள்முதல் விலையை நிர்ணயிக்கின்றன என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் ஆலை அதிபர்களோ கரும்பு கொள்முதல் விலை நிர்ணயிப்பதில் ரங்கராஜன் குழு அளித்த பரிந்துரையை அமல் செய்து அதன்படி ஒரே சீரான விலையை நிர்ணயிக்குமாறு வலியுறுத்துகின்றனர். இந்த கொள்முதல் பார்முலாவை மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் பின்பற்றுவதால் அங்கு நிலுவைத் தொகை குறைவாக இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எப்ஆர்வி விலையில் கரும்பு கொள்முதல் செய்து அதை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அதன் பின்னர் கரும்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை உள்ளிட்ட உப பொருள்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் 70 சதவீதத்தை பகிர்ந்து அளிக்கலாம் என பரிந்துரை செய்தது.
ஒரு குவிண்டால் சர்க்கரை ரூ. 2,550 முதல் ரூ. 2,600 விலையில் விற்பனையாகிறது. இதனால் தங்களுக்கு பெருமளவு இழப்பு ஏற்படுவதாக ஆலை அதிபர்கள் கூக்குரலிடுகின்றனர்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்த உள்ளார் பாஸ்வான். இந்த கூட்டம் இம்மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம், பிஹார், கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே கச்சா சர்க்கரை ஏற்றும திக்கு அளிக்கப்படும் சலுகையைப் போல சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கும் சலுகை அளிக்க வேண்டும் என ஆலை அதிபர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயிகள் வாழ்க்கையில் விளை யாடும் அரசியல்வாதிகளும், தொழிலில் லாபமே பிரதானம் என நினைக்கும் ஆலை அதிபர்களும் மனமிறங்கி விவசாயிகளும் பிழைக்க வேண்டும், அவர்கள் வயலில் இறங்கி நட்டால்தான் தங்கள் ஆலைகளுக்கு கரும்பு வரும் என்று நினைக்க வேண்டும்.
அதிக சர்க்கரைச் சத்துள்ள கரும்பு சாகுபடியாக புதிய ஆராய்ச்சிகள் தேவை. அத்துடன் மொலாசஸ்ஸிலிருந்து எத்தனால் தயாரிப்பதையும் எத்தனாலை எரிபொருளுடன் கலந்து பயன்படுத்துவதையும் அரசு தீவிரமாக ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை ஆலைகளுக்கு வருவாய் அதிகரிக்கும். அரசின் கையிருப்பில் இருக்கும் சர்க்கரையின் அளவு, வெளிநாடுகளில் சர்க்கரைக்கு இருக்கும் தேவை, நம் நாட்டில் சர்க்கரைக்கு உள்ள தேவை போன்றவற்றைக் கணக்கில் எடுத்து ஆண்டுதோறும் கரும்பு சாகுபடிப் பரப்பை வரையறுப்பதும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.
மாதம் 30 நாளும் உழைத்து மாதக் கடைசியில் வங்கிக் கணக்கில் சம்பளம் விழும்போதுதானே வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கிச் செல்ல முடியும். கரும்பு பயிரிடும் விவசாயிகளும் இதைப் போல மாற்று வேலைகளைத் தேடினால், சர்க்கரை விலை நமக்கும் கசக்கும்.!


கட்டுரை எண் : 6


12 சர்க்கரை ஆலைகளில் மின் நிலையம், இயந்திரங்கள் நவீனமயமாக்கல்: ரூ.1,241 கோடியில் திட்டப்பணிகள்


தமிழகத்தில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.1241.65 கோடியில் 183 மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ள 46 சர்க்கரை ஆலைகளில், 25 தனியார் ஆலைகள், 16 கூட்டுறவு ஆலைகள், 2 பொதுத்துறை ஆலைகள் என 43 ஆலைகள் இயக்கத்தில் உள்ளன.
இந்த ஆலைகளில் கரும்பு சக்கை, கழிவுப்பாகு, கழிவு மண், மின்சாரம் போன்றவை உப உற்பத்தி பொருட்களாகும். இவற்றின் மூலம் ஆலைகளுக்கு வருமானம் கிடைக்கிறது.
கரும்பு சக்கை மூலம் 2014-15, 2015-16 ஜூன் வரை, ரூ.10.70 கோடி, கழிவுப்பாகு மூலம் ரூ.102.16 கோடி, கழிவுப்பாகில் இருந்து கிடைக்கும் எத்தனால் மூலம் ரூ.44.26 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
கூட்டுறவு சர்க்கரை ஆலை களில் கடலூர் எம்.ஆர்.கே.ஆலை மற்றும் செய்யாறு ஆலைகளில் தலா 7.5 மெகாவாட், சுப்பிர மணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 5 மெகாவாட் திறனில் இணை மின் உற்பத்தி நிலையங் கள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் கடந்தாண்டும், இந்தாண்டு ஜூன் வரையும் சேர்த்து ரூ.1.21 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இது தவிர, தற்போது நாமக்கல், தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மதுரை, பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மின் உற்பத்திக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக ரூ.964.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் 183 மெகாவாட் திறன் கொண்ட இணை மின் உற்பத்தி நிலையங்கள் சர்க்கரை ஆலைகளில் நிறுவப்பட்டு வருகின்றன.
வேலூர், திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறு மற்றும் விழுப்புரம் மாவட்டம் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இப்பணிகள் இந்தாண்டு நவம்பர் மாதம் முடியும். மற்ற அரசுத்துறை ஆலைகளில் பணிகள் முடிக் கப்பட்டு, மின் உற்பத்தி தொடங்க உள்ளது. இணை மின் உற்பத்தி திட்டத்துடன் இந்த 12 சர்க்கரை ஆலைகளில் ஆலை இயந்திரங் களை நவீனப்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
இந்த ஆலைகளில் சர்க்கரை உற்பத்திக்கு தேவையான மின் சக்தி மற்றும் நீராவி பயன்பாட்டை குறைத்து, மின்சாரத்தை விற்கும் அளவை அதிகரிக்க ரூ.276.27 கோடியில் ஆலை இயந்திரங்களை நவீனப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன.
இதில், தருமபுரி, சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி-1, 2 கூட்டுறவு ஆலைகள் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மேம்பாட்டு பணிகள் முடிந்துள்ளன. வேலூர், செய்யாறு மற்றும் செங்கல் வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்பாட்டுப் பணிகள் இந்தாண்டு நவம்பருக்குள் முடியும் என தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 25 தனியார், 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை ஆலைகள் என 43 ஆலைகள் இயக்கத்தில் உள்ளன.

#UPSCTAMIL

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN