பருவநிலை மாற்றம்

Topic: ESSAY

பருவநிலை மாற்றம்: இனியும் விழிக்காவிட்டால் விளைந்திடும் 15 பேராபத்துகள்!


புவி வெப்பமடைதலின் கோர விளைவுகளை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக சீரிய அறிவியல் ஆய்வுத் தகவல்களுடன் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரை நடத்தப்பட்ட பருவநிலை மாற்ற ஐ.நா. மாநாடுகளில் புவி வெப்பமடைதல், கரியமிலவாயு வெளியேற்றம் ஆகியவற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. அத்துடன், மேலும் உற்பத்தி நடவடிக்கைகள் பெருகவே செய்துள்ளன என்பதை உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் கவலையுடன் எதிர்நோக்குகின்றனர். 


சரி, நாடுகள் இதற்காக ஒன்றுமே செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? கடலோர நகரங்கள் கடல்நீரில் அமிழ்வதும், உலகின் பெரும் பகுதிகள் வெப்ப அலைகளினால் தாக்குண்டு வறட்சி நிலையும், இதனால் பெருமளவு அகதிகள் பெருகுவதுமாக நாடுகள் பெரும் அச்சுறுத்தலைச் சந்திக்கத் தயாராக வேண்டும். 

ஒன்று புவிவெப்பமடைதல் நிகழ்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், இல்லையெனில் அதன் தீவிர விளைவுகளைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அத்தகைய இயற்கைப் பேரழிவுகளைச் சந்திக்கும் ஏழை நாடுகளிடம் அதற்கான பொருளாதார வலுவில்லை என்பதே உண்மை. 

இந்நிலையில், பாரீஸில் 195 நாட்டுத் தலைவர்கள் பருவநிலை மாற்ற ஐ.நா. உச்சி மாநாட்டுக்காகக் கூடியுள்ளனர். இந்த மாநாடும் இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தகுந்த அதிரடி முடிவுகளை எடுக்க முடியாது போனால், என்ன ஆகும் என்பது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைப்புகள் முன்வைக்கும் 15 அம்ச பட்டியல்: 

1. இந்த நூற்றாண்டு முடிவில் பூமியின் வெப்ப அளவு 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இதுகுறித்த இமாலய அளவுக்கு விஞ்ஞான ஆய்வுத் தரவுகள் உள்ளன. அவை 4 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவு அதிகரிப்பு பேரழிவில் கொண்டு விடும் என்று எச்சரித்துள்ளன. 

2. எது எப்படி போனால் என்ன? நாம் நம் உற்பத்தி, வர்த்தக நடவடிக்கைகளை கவனிப்போம் என்ற அலட்சிய நோக்கு, மீண்டும் நிலைநிறுத்த முடியாத அளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று நாடுகளுக்கிடையேயான ஐ.நா. பருவநிலை மாற்றக் குழு எச்சரித்துள்ளது. 

3. 2100-ம் ஆண்டில் உலக அளவில் கடல்நீர் மட்டம் 26-82 செ.மீ. வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அளவு அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாக ஐ.நா. தரவுகளே கூறுகின்றன. 

4. கிரீன்லாந்து, அண்டார்டிகா பனிப்படலங்கள், இமாலயம் உள்ளிட்ட மலைகளின் பனிச்சிகரங்கள் ஆகியவை காலியாகிவிடும். இதனால் கடல் நீர்மட்டம் அதிகரிப்பதோடு வெப்பமடைவதும் நிகழும். 

5. ஐ.நா. நிர்ணயித்த வெப்ப நிலை அதிகரிப்பான மட்டுப்படுத்தப்பட்ட 2 டிகிரி செல்சியஸ் கூட 28 கோடி மக்களின் அழிவுக்குக் காரணமாகிவிடும். 

6. அதிவேக புயல்கள், உறைய வைக்கும் குளிர், தீவிர வெப்ப அலைகள் ஆகியவை வாடிக்கையான நிலைமைகள் ஆகிவிடும். 

7. கடும் வெள்ளங்கள், பனிப்புயல், டைஃபூன் சூறைக்காற்று ஆகிய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டி வரும். 

8. மேலும் உலகின் ஒரு பகுதியில் தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும். 

9. சிரியா மற்றும் கலிபோர்னியா வறட்சி நிலைக்கு வானிலை மாற்றமே காரணம் என்பதை விஞ்ஞானிகள் நிறுவியுள்ளனர். 

10. பருவநிலை மாற்றம் விளைவிக்கும் பெரிய வெள்ளங்களினால் பெரும்பகுதி மக்கள் திரள் தங்கள் இருப்பிடங்களை விட்டு புலம் பெயர வேண்டும். 

11. விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, உணவுப்பொருள் தட்டுப்பாடுகள் ஏற்படும். 

12. நீராதாரத்திற்காக போர் மூளும் அபாயமும் உள்ளது. 

13. கடல் நீர்மட்ட உயர்வினால் சுந்தரவனக் காடுகள் அழியும் ஆபத்து உள்ளது, இப்பகுதியிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மக்கள் தொகை புலம் பெயரும் நிலை ஏற்படும். 

14. மாலத்தீவுகள், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் கடல் நீர்மட்ட உயர்வால் வானிலை மாற்ற அகதி நாடுகளாக மாறும் நிலை ஏற்படும். 

15. இயற்கைப் பேரிடர்களினால் ஏற்படும் விளைவுகளிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க முடியாமல் ஏழை நாடுகள் பொருளாதார தேக்க நிலைக்குத் தள்ளப்படும்.

பருவநிலை மாற்றம்: பொறுப்பிலிருந்து நழுவும் பணக்கார நாடுகள்

பாங்காக் நகரில் சமீபத்தில் நடந்த பருவநிலை மாற்றம் பற்றிய ஐநா கட்டமைப்பு ஒப்பந்த மாநாட்டில், பசுங்குடில் வாயு வெளியேற்றம், இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட பிரச்சினைகளில் ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில் விதிமுறைகளை உருவாக்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை ஏற்க ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மறுத்திருக்கும் நிலையில், பருவநிலை மாறுதலை எதிர்கொள்வதற்குத் தேவையான நிதியை வழங்குவதில் அமெரிக்கா உள்ளிட்ட சில வளர்ந்த நாடுகள் ஆர்வம்காட்ட மறுக்கின்றன.
பாரீஸ் ஒப்பந்தத்தின்படி வெள்ளம், புயல், வறட்சி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களின்போது உதவ, வளரும் நாடுகளுக்காக
2020-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலரைத் திரட்டும் பொறுப்பு பணக்கார நாடுகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
பருவநிலை மாறுதலின் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையில் இருக்கும் நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், நிதி வழங்குவது பணக்கார நாடுகளின் கடமை. பருவநிலையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான வளர்ச்சித் திட்டங்கள் மூலம், தங்கள் குடிமக்களின் மேம்பாட்டுக்குப் பணக்கார நாடுகள் உதவியிருக்கலாம். ஆனால், வளி மண்டலத்தில் கரியமில வாயு மிகக் கடுமையாக அதிகரிக்க அந்நாடுகளே முக்கியக் காரணம். இவ்விஷயத்தில், வளரும் நாடுகளுக்குத் தேவைப்படும் நிதி உதவி, தொழில்நுட்பங்களை வழங்க பணக்கார நாடுகளை நிர்ப்பந்திக்கும் வகையிலான விதிமுறைகள் உருவாக்கப்படுவதுதான் இன்றைய தேவை.
பசுங்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் விஷயத்தில் இந்தியா மீதும் சீனா மீதும் சர்வதேச அளவில் அழுத்தங்கள் நிலவுகின்றன. இவ்விஷயத்தில் இரு நாடுகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்தே செயல்படுகின்றன. 2010 ஆண்டுவாக்கில் இந்தியாவின் வருடாந்திரக் கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவு 2.136 மில்லியன் டன்னாக இருந்தது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பருவநிலை மாற்றம் பற்றிய ஐநா கட்டமைப்பு ஒப்பந்த மாநாட்டில் தெரிவித்த இந்தியா, 2005-2010 காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவு 12% குறைந்ததையும் சுட்டிக்காட்டியது. பாரீஸ் ஒப்பந்தத்தைப் பின்பற்றும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும், பருவநிலை விஷயத்தில் வளரும் நாடுகளை வழிநடத்தும் பொறுப்பும் இருக்கிறது.
மேற்கு அண்டார்டிகாவில் பனிப்பாறைப் படலம் உருகி, கடல் மட்டம் உயரும் அபாயம் உருவாகியிருப்பதை அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 2 டிகிரி செல்சியஸ் உயர்வுகூட கிரீன்லாந்து பனிப்பாறைப் படலத்தைப் பலவீனமடையச் செய்யும் என்று கூறப்படுகிறது.  உலக சராசரி வெப்பநிலையில் 1.5 டிகிரி செல்சியஸ் உயர்வதன் விளைவுகள் குறித்து, பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கு இடையிலான குழு அக்டோபரில் வெளியிடவிருக்கும் அறிக்கை, இந்தப் பிரச்சினைகள் குறித்த ஆழமான புரிதலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரழிவுகளைத் தவிர்க்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கத் தாங்கள் தயார் என்று காட்டும் வகையில் உலகத் தலைவர்கள் செயலாற்ற வேண்டிய தருணம் இது!

பருவநிலை மாற்றம் சிறப்புக் கட்டுரை: புதிய பாதை அமைக்குமா பாரிஸ்?


புவி அளவுக்கு மீறி வெப்பமடைந்து வருவதன் விளைவாக உலகைப் புரட்டிப்போடும் பருவநிலை மாற்றம் உருவாவதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்ற கேள்வி மிக முக்கியமானது. அறிவியல்பூர்வமாக பார்த்தால், புவி வெப்பமடையக் காரணமாக இருக்கும் பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதற்கு புதைபடிவ எரிபொருளை அடிப்படையாகக்கொண்டு இன்றைய நாகரிகத்தை கட்டியெழுப்பியது, காடுகளை அழிப்பது, நிலப் பயன்பாடுகளில் மாற்றங்களைக்கொண்டுவந்ததும்தான் காரணம்.
ஆழமாக ஆராய்ந்தால், இது வெறும் பசுங்குடில் வாயுக்கள் பிரச்சினையோ அல்லது புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்தியது மட்டுமே அல்ல. மாறாக ‘வளர்ச்சி - மேம்பாடு’ என்ற கோட்பாட்டை மையமாகக்கொண்டு எழுப்பப்பட்ட பொருளாதாரப் போக்குகளும், தத்துவங்களும், செயல்பாடுகளும்தான் முக்கிய காரணங்களாக அமைகின்றன.
புதைபடிவ எரிபொருட்களை அளவோடு பயன்படுத்தியிருந்தால் உலகுக்கு தற்போது அடைந்துள்ள மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், லாபத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு அளவு மீறிய பேராசையோடு செயல்பட்ட பொருளாதாரம், அரசியல் போக்குகளே இதற்குக் காரணம்.
அந்தப் போக்கு பல படிகளைக் கடந்து, இன்றைக்கு உலகமயமாதலில் வந்து நிற்கிறது. இந்த நாசகரமான பொருளாதார போக்கு, உலகையே அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
ஏன் இந்த அவல நிலை?
இந்தக் காரணங்களுக்கும் மேலாக ஒரு முக்கியக் காரணம் உண்டு. அது பொருளாதாரத்துக்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள அடிப்படையான உறவு. அன்பு, பகிர்தல், இரக்கம், எளிமை, கரிசனை, அக்கறை போன்ற ஆன்மிக சமுத்துவப் பண்புகளும், நீதி, நியாயம், உரிமைகள் போன்றவைகள் அடங்கிய அறநெறிகளுமே அவை.
மனித வாழ்வின் அடைப்படை ஆன்மிக நெறிகளுக்கு அன்பே பிரதானமானது. சமுதாய அமைப்புகள் ஊடே அன்பு பரிணமிக்கும்போதுதான் மனித வாழ்வு வளமையும் செழுமையும் கொண்டதாக உருவெடுக்கும்.
நவீன பொருளாதாரத் தந்தை என்று கருதப்படும் ஆடம் ஸ்மித்தின் காலத்தில்தான் ‘பொருளாதாரம் என்பது பொருளாதாரத்துக்கே’ என்ற தன்மை உருவானது. பொருளாதாரத்துக்கும், அறநெறிகளுக்கும் உள்ள தொடர்பு அறவே துண்டிக்கப்பட்டது. இந்தப் போக்கு உலக வரலாற்றில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கி உலகை சீரழித்துக் கொண்டே இருக்கிறது.
போட்டி, சுரண்டல், பேராசை, ஆதிக்க வெறி, செல்வக் குவிப்பு போன்ற எதிர்மறை சக்திகளுடன் இயங்கும் நவீன பொருளாதாரம், எப்படி உலகில் அன்பு, நிரந்தர சமாதானம், அகிம்சையைக் கொண்டுவர முடியும்? இன்றைய பொருளாதாரப் போக்கு வன்முறை யானது.
அது வன்முறையை மேலும் மேலும் பெருக்கக்கூடியது. இன்றைய இயற்கை நேயமற்ற, மனித நேயமற்ற போக்குகள் இந்த வன்முறை பொருளாதாரத்தின் வெளிப்பாடுகளே. உலகம் அழிவு நோக்கி நகர்வதற்கு இதுவே அடிப்படைக் காரணம்.
சர்வதேச சமூக ஈடுபாடு
நவீன வளர்ச்சிப் போக்கு குறித்து 1970-களிலிருந்தே சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்தன. உலகம் கடைபிடிக்கும் வளர்ச்சிப் போக்கு நிலைத்ததும், நீடித்ததும் தானா அல்லது அப்போக்கால் வருங்கால சந்ததிகள் பாதிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்தன. அக்காலகட்டத்தில் சர்வதேச அளவில் நடைபெற்ற ஸ்டாக்ஹோம், ஜோகனஸ்பார்க் மாநாடுகளில் இக்கேள்விகள் விவாதப் பொருட்களாக அமைந்தன.
1980-களில் புவிவெப்பமடைதலும், அதனால் பருவகாலநிலையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களையும் பற்றி உலகம் ஓரளவு அறியத் தொடங்கியது. ஐ.பி.சி.சியின் முதல் அறிக்கையைத் தொடர்ந்து 1992-ல் பிரேசிலிலுள்ள ரியோ டி ஜெனிரோ புவி மாநாடு (Earth Summit) நடைபெற்றது. இம்மாநாட்டில் புவி வெப்பமடைதலும், காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் உறுதி செய்யப்பட்டன.
உலக அளவில் பருவநிலை மாற்றப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள ஐ.பி.சி.சி. என்ற அறிவியலாளர்கள் அமைப்பும், கோட்பாட்டு அளவில் அரசியல் முடிவுகள் எடுக்க யு.என்.எஃப்.சி.சி.சி. என்ற அமைப்பும் முடிவெடுத்துள்ளன. ஐ.பி.சி.சி. தன்னுடைய 5-வது மற்றும் சமீபத்திய மதிப்பீட்டு அறிக்கையில் எப்படிப்பட்ட பேரழிவு நம்மைத் தாக்கப் போகிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளது. பேரழிவிலிருந்து உலகம் தப்புவதற்கான வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
யு.என்.எஃப்.சி.சி.சி. அமைப்பு இதுவரை 20 முறை கூடி மாநாடுகளை நடத்தியுள்ளது. ரியோவிலிருந்து லிமா மாநாடுவரை இந்த அமைப்பின் சாதனைகள் என்ன என்ற கேள்வி எழுந்தால், கொள்கை ரீதியில் பல சாதனைகளைக் கூறலாம்.
ஆனால் அடிப்படைக் கேள்வி அதன் அடிப்படையில் பசுங்குடில் வாயு எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது? உலகம் பேரழிவிலிருந்து பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறதா என்று கேட்டால், தெளிவான விடையை கூறும் நிலை இல்லை.
மாநாடுகள் என்ன செய்தன?
தற்போது பாரிஸில் நடைபெற்றுவரும் மாநாட்டைப் போன்ற உலக மாநாடுகள், உலகை ஒட்டுமொத்த அழிவிலிருந்தும் பேரழிவிலிருந்தும் காப்பாற்றும் என்ற நம்பிக்கை பெரும்பாலோரிடையே குறைந்துகொண்டே வருகிறது. மாநாடுகள் வெற்றியடையாததற்கு பல காரணங்கள் உண்டு.
அதில் முக்கியமானது இன்றைய பொருளாதாரப் போக்குக்குள்ளேயே, சிற்சில மாற்றங்களோடு தீர்வு காண முற்படுவது, இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் பன்னாட்டு பெருநிறுவனங்களின் மறைமுகமான, அதேநேரத்தில் பலமான அழுத்தங்கள் காலநிலை அரசியலுக்குள் ஊடுருவியுள்ளதும்தான்.
அத்துடன் ஒவ்வொரு நாடும் தங்களுடைய சுயநலப் பார்வையோடு மாநாட்டில் பங்கெடுப்பது, விளிம்புநிலை நாடுகளின் குரல் எடுபடாமல் போவது போன்றவற்றை சொல்லலாம்.
இந்த முயற்சிகளின் விளைவால் நம்முடைய பூமி ஒருவேளை ஒட்டுமொத்த அழிவிலிருந்து தப்பினாலும்கூட, எதிர்காலத்தில் தொடந்து பல நூற்றாண்டுகளுக்கு பேரழிவுகளில் சிக்கித் தவிக்கும். மனித சமூகமும் மற்ற உயிரினங்களும் தொடந்து துயரத்தையே அனுபவிக்கும்.
ஏனென்றால் நாம் ஏற்கனவே வெளியிட்ட, தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிற கார்பன்-டை-ஆக்சைடின் ஆயுள் பல நூற்றாண்டுகளுக்கு நீடிப்பதே இதற்கு அடிப்படைக் காரணம்.
இந்த கட்டத்தில் வேறொரு சிந்தனைப் போக்கையும் மனதில் கொள்ள வேண்டும். தொழிற்புரட்சிக்குப் பின் ஏற்பட்ட இயந்திர மயமாக்கப்பட்ட நாகரிகம் சிதைந்துவிடும் (The decline of industrial civilization) என்று சில விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அப்படி நடக்காது என்று இன்றைக்கு மறுக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை.
பருவநிலை மாற்றம் ஏற்படக் காரணமாக இருக்கும் பசுங்குடில் வாயுக்களை குறைப்பதற்கு வன்முறையற்ற, இயற்கைநேய, மனிதநேய சிந்தனைகளும், செயல்பாடுகளும், மனமாற்றங்களும் தேவைப்படுகின்றன.
இதைப் பற்றிய சிந்தனைகளும் விவாதங்களும் மக்களிடையே பரவலாக்கப்பட்டு, வளர்க்கப்பட வேண்டும். பூவுலகை பாதுகாக்க வேண்டிய முயற்சியில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. பூவுலகு காப்பாற்றப் பட்டால்தான், நாமும் பாதுகாக்கப்படுவோம்.

- கட்டுரையாளர், கோபன்ஹேகனில் நடைபெற்ற முந்தைய பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டில் பங்கேற்றவர்

தொடர்புக்கு: Ydavid.tn@gmail.com

பருவநிலை மாற்றத்தால் வெடிக்கப் போகிறது போர்?


‘தண்ணீர் வளத்தைக் கைப்பற்ற எதிர்காலத்தில் மூன்றாவது உலகப் போர் வெடிக்கலாம்' என்று சுற்றுச்சுழல் அறிஞர்கள் முன்பு எச்சரித்தபோது, நம்பமுடியாத ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது ஐ.நாவின் துணை அமைப்பான ஐ.பி.சி.சி. (பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழு - Intergovernmental Panel on Climate Change) அந்தக் கணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
‘எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு, உணவுப் பயிர் உற்பத்தி போன்றவை கடுமை யாக பாதிக்கப்படும். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இதன் காரணமாக போர் வெடிக்கலாம்' என்று ஐ.பி.சி.சி. சமீபத்தில் எச்சரித்திருக்கிறது.
பருவநிலை மாற்றம் (Climate Change) உலகின் அனைத்து கண்டங்களிலும், பெருங்கடல்களிலும் ஏற்கெனவே பற்றியெரிந்துவரும் சுற்றுச்சூழல் பிரச்சினையாக இருக்கிறது. வெள்ளம், புயல், கடுமையான மழைப்பொழிவு, வெப்பஅலை, வறட்சி, காட்டுத்தீ போன்ற பருவநிலை மாற்ற தீவிர பிரச்சினைகள் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளன. ஆனால், அந்த ஆபத்துகளை எதிர்கொள்ளவோ, சமாளிக்கவோ, தடுக்கவோ இந்த உலகம் இன்னும் தயார்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறது என்றும் ஐ.பி.சி.சி. எச்சரித்துள்ளது.
பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான 2,600 பக்க அறிக்கையை ஜப்பான் நகரம் யோகஹாமாவில் ஐ.பி.சி.சி. சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையில்தான் மேற்கண்ட முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஐ.பி.சி.சி.யில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள், அரசுப் பிரதிநிதிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
யாரும் தப்பிக்க முடியாது
"பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து இந்த உலகத்தில் யாரும் தப்பிக்க முடியாது" என்று எச்சரிக்கிறார் ஐ.பி.சி.சி. அமைப்பின் தலைவரும் இந்திய விஞ்ஞானியுமான ராஜேந்திர பச்சௌரி. மழைபொழியும் முறை மாறும், வறட்சி அதிகரிக்கும் என்பதால் வசிப்பிடம், சொத்துகள், உணவு, தண்ணீர் போன்றவை கடுமையாக பாதிக்கப்படும். இதன் விளைவாக பட்டினியும், இடப்பெயர்வும், இயற்கை வளங்களை பயன்படுத்துவதற்கான போட்டியும் அதிகரிக்கும்.
"பருவநிலை மாற்றத்தால் துருவக்கரடிகள், பவழத்திட்டுகள், மழைக்காடுகள் மட்டும் ஆபத்தில் இல்லை. உண்மையான ஆபத்து மனிதர்களுக்குத்தான்" என்கிறார் கிரீன்பீஸ் அமைப்பின் அரசியல் ஆலோசகர் கைசா கோசனன்.
உலகுக்கு ஏற்பட்டுள்ள நிஜமான ஆபத்தை தெள்ளத் தெளிவாக, அறிவியல்பூர்வமாக ஐ.பி.சி.சி. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதை உணர்ந்து செயல்படத் தவறினால், பயங்கரமான பின்விளைவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
யார் காரணம்?
இந்த மோசமான மாற்றங்கள் அனைத்துக்கும் காரணம் மனிதச் செயல்பாடுகள்தான். கட்டுமீறிய நுகர்வுக் கலாசாரமும், சுற்றுச்சூழல் சீரழிவும்தான் அந்தக் காரணங்கள்.
மின்சாரம், பெட்ரோல் போன்ற எரிபொருட்களை நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். மின்சாரம் தயாரிக்க அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலக்கரியும், மற்ற எரிபொருட்களும் கார்பன் டை ஆக்சைடு, மீதேன் உள்ளிட்ட வாயுக்களை அதிகமாக வெளியிடுகின்றன. இவை பூமியின் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கக் காரணமாக அமைகின்றன. இது புவி வெப்பமடைதல் (Global warming) எனப்படுகிறது.
கடல்மட்ட உயர்வு, பனிச்சிகரங்களும் துருவப் பனிப்பாறைகளும் வழக்கமற்று உருகி வருவதற்குக் காரணம், மனிதச் செயல்பாடுகளால் தீவிரமடைந்த புவி வெப்ப மடைதல்தான் என்று ஐ.பி.சி.சி. ஏற்கெனவே எச்சரித்திருக்கிறது. அதனால் ஏற்படும் பின்விளைவுகள் காலநிலை மாற்றம் எனப்படுகிறது.
முக்கிய பாதிப்புகள்
காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக, உலக சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட அதிகபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் உயரும். சராசரி வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்போதே, பின்விளைவாக உருவாகும் ஆபத்துகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடும்.
2100க்குள் கடல் மட்டம் ஒன்று முதல் இரண்டரை அடி வரை உயரும். விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் அரிசி, கோதுமை, சோளம் போன்ற முதன்மை உணவுப் பயிர்களின் உற்பத்தி சரியும். உலகின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பதால், கொசுக்களாலும் தண்ணீராலும் பரவும் தொற்றுநோய்கள் அதிகரிக்கும்.
இந்தக் கணிப்புகள் எதுவும் நம்மை பயமுறுத்துவதற்காகக் கூறப்படுபவை அல்ல. அனைத்தும் வலுவான அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் முன்மொழியப் பட்டிருக்கின்றன.
வருவாய் இழப்பு
தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது 2 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை அதிகரித்தால், சர்வதேச ஆண்டு வருமானத்தில் அதிகபட்சமாக 2 சதவீத இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் இந்தியா போன்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 1.7 சதவீதம் சரியும். இது 3 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்கிறார் இந்திய ஆராய்ச்சியாளர் சுரேந்தர் குமார்.
இதன் காரணமாக ஏழ்மை அதிகரிக்கும், பொருளாதாரச் சரிவுகள் பரவலாகும். உணவுப்பொருள் விலையேற்றத்துக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் தொடர்பிருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது. தொடர்ச்சியாக போர்களும் மூளலாம்.
இந்திய நிலை
பருவநிலை மாற்றம் இந்தியாவில் ஏற்கெனவே பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. மேற்குவங்க சுந்தரவன கடல் பகுதியில், ஏற்கெனவே பல தீவுகள் மூழ்கிவிட்டன. இமயமலைப் பனிச்சிகரங்கள் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக உருகி வருகின்றன. இதனால் இந்தியாவை வளப்படுத்திக் கொண்டிருக்கும் ஜீவநதிகள் அனைத்தும் வெள்ளத்தாலோ, வறட்சியாலோ பாதிக்கப்படக்கூடும். தொடர்ந்து கடுமையான நெருக்கடிகளும், மோதல்களும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"கங்கைப் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இப்போதே அந்தப் பகுதி கடுமையான வெள்ளத்தை அடிக்கடி சந்தித்து வருகிறது. எதிர்காலத்தில் இப்பகுதியை வறட்சியும் தாக்கக்கூடும். சிந்து நதியிலும், பிரம்மபுத்திரா நதியிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது" என்கிறார் ஐ.பி.சி.சி. அறிக்கையில் பங்காற்றியுள்ள இந்திய ஆராய்ச்சியாளர் அரோமார் ரெவி.
மற்ற பாதிப்புகள்
கடல் மட்டம் உயரும் என்பதால் கேரளத்திலும் கோவாவிலும் கரையோர மக்கள் பாதிப்புகளைச் சந்திப்பார்கள், அந்தப் பகுதிகளின் பொருளாதார அஸ்திவாரங்களான சுற்றுலா ஆட்டம் காணும். மும்பை, கொல்கத்தாவின் பெரும்பகுதி இன்னும் 100 ஆண்டுகளில் கடலுக்குள் இருக்கலாம். உத்தரகண்டில் உருவான திடீர் வெள்ளம், ஒடிசாவை உலுக்கிய பைலின் புயல் போன்றவை அதிகரிக்கலாம். இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் ஏற்கெனவே நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையிலேயே கணிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே நிகழ்ந்த இயற்கைச் சீற்றங்களின் தீவிரம் நாம் அறியாத ஒன்றல்ல.
எப்படித் தடுப்பது?
பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைக்க தகவமைப்பு நடைமுறைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக முடுக்கிவிட வேண்டும். அதுதான் தற்போதுள்ள ஒரே வழி.
மீதேன், கார்பன் டை ஆக்சைடு வாயுக்களின் வெளியீட்டை உண்மையிலேயே குறைத்தால், ஆண்டுக்கு 20 முதல் 25 லட்சம் பேர் இறப்பதைத் தடுக்கலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
தண்ணீரை வீணாக்குவதைக் குறைப்பது, நகரங்களில் வெப்பநிலை அதிகரிப்பைக் குறைக்க பூங்காக்கள், தோட்டங்களை உருவாக்குவது, பருவநிலை பாதிப்புக்கு ஆளாகக்கூடிய ஆபத்தான பகுதிகளில் மக்கள் குடியேறுவதைத் தடுப்பது போன்றவை பருவநிலை மாற்றத் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு சில எடுத்துக்காட்டுகள்.
“கயிற்றின் மீது நடந்துகொண்டிருக்கிறோம். பருவநிலையை மாசுபடுத்தும் வாயுக்களைக் குறைக்கும் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டால், மனிதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்” என்கிறார் கைசா கோசனன்.
பருவநிலை மாற்றம் என்ற அந்தக் கயிறு அறுந்துபோகும் நிலையில்தான் இருக்கிறது. அறுந்து போவதைத் தடுத்தால் மட்டுமே நாமும், நம் சந்ததிகளும் பிழைக்க முடியும். செய்வோமா?
முக்கிய ஆபத்துகள்
 பருவநிலை மாற்றத்தால் ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள் அதிகம் பாதிக்கப்படலாம்.
 வெள்ளம், புயல், கடுமையான மழைப்பொழிவு, வெப்பஅலை, வறட்சி, காட்டுத்தீ போன்ற பருவநிலை மாற்ற தீவிரப் பிரச்சினைகள் சமீப காலத்தில் அதிகரித்துள்ளன.
# மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றம், நன்னீர் ஆதாரங்களின் அளவிலும், தரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். நன்னீர் கிடைக்கும் விகிதம் சரியும்.
# இமயமலை பனிச்சிகரங்கள் சுருங்கும் என்பதால், அவற்றை நம்பியுள்ள ஜீவநதிகளில் தண்ணீர் வரத்து குறையும்.
# இமாலய நதிப் பாசனப் பகுதிகளில் நன்னீர் ஆதாரம் குறையும் என்பதால், இந்த நூற்றாண்டின் மத்தியில் இந்தியா-தெற்கு ஆசியாவில் உள்ள மற்ற நாடுகள் இடையே போர் வெடிக்கலாம்.
# பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு ஏற்ப தேசிய பாதுகாப்புக் கொள்கையிலும் மாற்றம் உருவாகும்.
# கடலோர வெள்ளத்தால் மக்கள் பலி, பொருட்சேதம் மட்டுமில்லாமல் இந்தியாவில் கோவா, கேரளாவில் சுற்றுலாத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்படும்.
# மும்பை, கொல்கத்தா போன்ற கடலோரப் பெருநகரங்கள் கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்படும்.
# கடல் மீன்கள், கடல் உயிரினங்களின் சில வகைகள் 2050 வாக்கில் ஒட்டுமொத்தமாக அற்றுப் போகும். இது மீன் தொழிலை பாதிக்கும்.
# இந்தியா, பாகிஸ்தானில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படும்.


No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN