ஆதாருடன் தொடர்புடைய கவலைகள்

General Studies-III:


TopicGovernment policies and interventions for development in various sectors and issues arising out of their design and implementation.


#UPSCTAMILExpected Question for UPSC  exam (Tamil): 


Discuss the Concerns and Arguments associated with Aadhar?

ஆதாருடன் தொடர்புடைய கவலைகள் மற்றும் விவாதங்களைப் பற்றி விவாதி ?


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் . 


contact mail ID  tnpscprime@gmail.com




ஆதார்: விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்கு உதவட்டும்



நன்றி:தமிழ் ஹிந்து 

ஆதார் அட்டை செல்லும் என்று அறிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘எல்லோருக்கும் அவரவர் தனிப்பட்ட அந்தரங்கம் அடிப்படை உரிமை’ என்று ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியதையடுத்து, குடிமக்களுக்குத் தனிப்பட்ட அடையாள எண்ணை வழங்கும் ஆதார் திட்டம் நீடிப்பது நிச்சயமில்லை என்ற நிலை ஏற்பட்டது. “ஆதார் திட்டம், தனிமனிதரின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தும்” என்று இத்திட்டத்தின் விமர்சகர்கள் சாடினர். “இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி ஏழைகளுக்கு அரசின் உதவிகள் சென்றடைய இது அவசியம்” என்று வாதிட்டது அரசு. இந்நிலையில், ஆதார் சட்டமானது, தனிமனித உரிமைகளை மீறவில்லை என்று அரசியல் சட்ட அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் கருத்து தெரிவித்துள்ளனர். “அரசியல் சட்டப்படி இது செல்லும்” என்று கூறியிருக்கும் நீதிபதிகள், “அதேசமயம் தனியார் நிறுவனங்களோடு ஆதார் விவரங்களைப் பரிமாறக் கூடாது” என்றும் கூறியிருக்கிறார்கள்.
தீர்ப்பில் மிக முக்கியமான விஷயம், ஆதார் சட்டத்தின் பிரிவு 57 செல்லாது என்று குறிப்பிடப்பட்டிருப்பது. ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்ய ஆதார் எண்ணைப் பயன்படுத்திக்கொள்ள நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் அதிகாரம் அளிக்கும் பிரிவு இது. இந்தத் திட்டத்தில் இதுவரை 120 கோடி பேர் சேர்க்கப்பட்டுள்ளதை உச்ச நீதிமன்றம் முக்கியமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. அதேசமயம், எந்த வரம்புக்குள் இதைப் பயன்படுத்தலாம் என்ற சட்டகத்தையும் குறுக்கியிருக்கிறது. ஆதார் நடைமுறையில் குறைகள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும்; அதேசமயம் இத்திட்டத்தையே மொத்தமாக வெட்டி எறிந்துவிடக் கூடாது என்பதே உச்ச நீதிமன்றம் விடுத்திருக்கும் செய்தி.

Image result for aadhar

தீர்ப்பின் மிக விவாதத்துக்குரிய அம்சம், மோடி அரசு இதை ‘பண மசோதா’வாக நிறைவேற்றியதைப் பெரும்பான்மை நீதிபதிகள் நியாயப்படுத்தியிருப்பதாகும். மாநிலங்களவையில் பெரும்பான்மை வலு இல்லாததால் இப்படி ‘பண மசோதா’ என்று அறிவித்து, மக்களவையில் நிறைவேற்றி, பிறகு சட்டமாக்கிக்கொண்டது அரசு. ஆதார் தேவை என்பதன் பொருட்டு இதை அங்கீகரித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், எத்தகைய விளைவுகளை எதிர்காலத்தில் இது உருவாக்கும் என்பதையும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி சந்திரசூட் “பண மசோதா என்று கூறி, மாநிலங்களவையின் அதிகாரம் மறுக்கப்பட்டிருப்பதால் ஆதார் திட்டம் அரசியல் சட்ட மோசடி” என்று கூறியிருப்பதை இங்கு ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாநிலங்களவையின் முக்கியத்துவத்தை நிச்சயமாக இது கேள்விக்குள்ளாக்குகிறது. மறுசீராய்வுக்கான சாத்தியங்களுக்கும் இது வழிவகுக்கிறது.
எப்படியோ, இப்போது ஆதார் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். விளிம்புநிலை மக்கள் மேம்பட அரசின் கரங்கள் நீள வேண்டும். கூடவே, குடிமக்களின் அந்தரங்கத்தைக் காக்கும் பொறுப்பிலும் தன் உறுதியை வெளிப்படுத்த வேண்டும்.


அலசல்: இனியேனும் ஆதார் குழப்பம் தீருமா?


இந்தியாவில் ஆதார் அடையாளத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பினை அளித்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான் என்று தீர்ப்பளித்தாலும் அதன் பயன்பாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
அரசின் அனைத்து திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டன. தவிர பான் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் போன்றவற்றுக்கும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, உச்ச நீதிமன்றம்  விசாரித்து வந்தது.
பல்வேறு நிலைகளைத் தாண்டி கடைசியில்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.  கடந்த வாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் ஒருமித்த கருத்தையும், நீதிபதி சந்திரா சூட் மாறுபட்ட கருத்தையும் தெரிவித்துள்ளனர். எனினும் ஆதார் அடையாளத்தை அரசு பெறுவதற்கு எந்த தடையுமில்லை என்பதுதான் தீர்ப்பின் முடிவு.
எனினும் நீதிபதி சந்திரா சூட் தனது தீர்ப்பில், ஆதார் இல்லாமல் இந்தியாவில் தற்போது வாழமுடியாது என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்றத்துக்குச் சட்டம் இயற்ற உரிமை இருப்பதுபோல் மக்களின் தகவல்களைப் பாதுகாக்கவும் உரிமை இருக்கிறது. அவ்வாறு பாதுகாக்கத் தவறினால் அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என கடுமையாக  விமர்சித்துள்ளார்.
 செல்போன் எண்களுடன் ஆதாரை இணைத்தது தவறு. இது தனிமனித சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் உருவாக்கக்கூடியது.  செல்போன் நிறுவனங்கள் மூலம் தனிமனித விவரங்கள் திருடுபோக வாய்ப்புகள் உள்ளன. தனி மனித உரிமை, தகவல் சுதந்திரம் உள்ளிட்டவற்றை மீறுவதாக ஆதார் உள்ளது.  தனிமனித விவரங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆதார் ஆணையத்துக்கு உள்ளது. ஆனால், ஆதார் ஆணையம் அப்படிப் பாதுகாப்பதுபோல் தெரியவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
அரசின் திட்டங்கள், மானிய உதவிகள் உரிய பயனாளிகளை சென்றடைவதற்கு ஆதார் அடையாளத்தை பயன்படுத்தலாம். ஆனால் ஆதார் அடையாளம் இல்லை என்பதால் அரசின் சலுகைகளை மறுக்கக்கூடாது என அரசுக்கு உத்தரவிட்டிருப்பதுடன்,  ஆதார் அடையாளத்தை நிறைவேற்றும் யுஐடிஏஐ அமைப்புக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
 தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற ஆதார் விவரங்களை அழிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஒய்.வி. சந்திர சூட் கூறியுள்ளார்.
அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கேட்பதை கட்டாயமாக்க முடியாது. அதன் அடிப்படையில் உரிமைகள் மறுக்கக்கூடாது. முக்கியமாக தனியார் நிறுவனங்களிடம் மக்களின் விவரங்கள் செல்லக்கூடாது என்பதுதான் தீர்ப்பின் சாரம்.  10 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கிற்கு தற்போது உச்ச நீதிமன்றம் தீர்வு அளித்துள்ளது. வரவேற்க வேண்டிய தீர்ப்பு.


நன்றி:BBC தமிழ் 


ஆதார் அவசியம் என்றால் உங்கள் தனியுரிமை எப்படி பாதுகாக்கப்படும்?


ஆதார் அடையாள அட்டை தொடர்பாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய சட்டத்தை எதிர்த்து கர்நாடக மாநில முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி தொடுத்திருந்த வழக்குதான் தனிமனித அந்தரங்கத்துக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு உண்டா என்பது குறித்த விவாதத்திற்கு வழிவகுத்தது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன நீதிமன்ற அமர்வு, தனியுரிமை தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை 2017ஆம் ஆண்டு வழங்கியது.
அதன்பின் இன்று ஆதார் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கோருவது சட்டத்துக்கு புறம்பானது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 142வது பிரிவின்கீழ், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவில் சட்டமாகக் கருதப்படுகிறது, ஆனால் தனியுரிமை குறித்த புதிய சட்டங்களை உருவாக்குவது பற்றி பேசப்படுகிறது. ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது மற்றும் அதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து, ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு 38 நாட்கள் விசாரணை செய்தது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதில் பங்களித்த கே.டி.ஷா மற்றும் கே.எம். முன்ஷி ஆகிய இருவரும் செக் குடியரசின் அரசியலமைப்பின் அடிப்படையில் தனிநபரின் உரிமைகள் குறித்த மசோதாவை தாக்கல் செய்தனர். 1946 ஆம் ஆண்டில், முன்வைக்கப்பட்ட அந்த மசோதாவில் தனிநபரின் தனியுரிமையைவிட, குடும்ப அமைப்பின் தனியுரிமைக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டிருந்தது.
கூட்டுப் பொறுப்பை வலியுறுத்திய டாக்டர் பிம்ராவ் அம்பேத்கர். 1947 மார்ச் மாதம், திருத்தப்பட்ட மசோதாவை முன்வைத்தார். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தியாயம் மூன்றில் தனியுரிமைக்கு தனிப்பட்ட அங்கீகாரம் வழங்கவில்லை.
1979 ல் இந்தியாவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் 17ஆம் பிரிவின்கீழ், தனியுரிமைக்கான உரிமையை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் வழங்கிய தனியுரிமை தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் "அந்தரங்கத்துக்கான உரிமை" என்பது அரசியலமைப்பு குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் அங்கமே" என்று தெரிவித்திருந்தார்.
இந்தியச் சட்டங்களில் தனியுரிமை-பொதுச் சட்டம் (பிரிட்டன் சட்ட அமைப்பு) மற்றும் பிற சட்டங்களின் விதிகளின் கீழ், இந்தியாவில், தனிநபரின் தனியுரிமைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி:
  • தகவல் உரிமை சட்டத்தின்கீழ், ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் நபருக்கு வழங்க முடியாது.
  • ஒருவரின் தொலைபேசி உரையாடலை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கு விசாரணைக்குழுக்கள் உயர்நிலை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
  • சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளின் டி.என்.ஏ சோதனை அல்லது மூளை மேப்பிங் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்.
  • பொதுமக்களின் வீடுகளிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்த வேண்டுமெனில், அதற்கு போலீசார் தங்கள் உயர் அதிகாரிகள் அல்லது நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும்.
இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதும், அதை ஆராய்வதும் சட்டப்படி குற்றம்.

ஆதார் திட்டத்தில் சட்ட முரண்பாடுகள்
ஆதார் தொடர்பாக இரண்டு முக்கிய விஷயங்களின் அடிப்படையில் விவாதங்கள் வைக்கப்படுகின்றன.
அமெரிக்க அரசால் அதன் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சமூக பாதுகாப்பு எண் (SSN) எஸ்.எஸ்.என், ஆதாரின் முன்னோடித் திட்டம் என்று கூறி ஆதாரை நியாயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் அந்த எண்ணை பெறுவது மக்களின் விருப்பம், எஸ்.எஸ்.என் வாங்கவேண்டும் என்று அமெரிக்க அரசு மக்களை கட்டாயப்படுத்தவில்லை. 1935 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.என் தொடர்பாக அமெரிக்காவில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, பொதுமக்களின் தனியுரிமைகளும், அவர்களின் நலன்களுக்கும் முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2006 ஆம் ஆண்டு ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 2010இல் ஆதார் மசோதா சாதாரண வரைவு மசோதாவாக நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது அதிகாரபூர்வச் சட்டமாக மாறவேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதற்கு ஒப்புதல் கிடைக்கவேண்டும். அந்த வரைவு மசோதாவை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, அரசின் கருத்துடன் வேறுபட்டது.

"ஆதார் எண் தொடர்பான தரவுகளை வேறு எவர் கையிலும் சிக்காமல் பாதுகாக்க வேண்டும், தனி மனிதர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும்" என்று நாடாளுமன்ற நிலைக்குழு விரிவான அறிக்கை அளித்தது. பிறகு சட்டம் இயற்றப்படாமலேயே ஆதாரை அமலாக்கப்பட்டதால், பல்வேறு பொதுநலன் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
சில குறிபிட்ட அரசுத் திட்டங்களுக்கு மட்டும் ஆதாரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் அனுமதித்த நிலையில், 2016 மார்ச் மாதத்தில் காங்கிரஸ் அரசின் ஆதார் வரைவு மசோதாவை திரும்பப் பெற்ற தற்போதைய அரசு, புதிய வரைவு வாசகம் கொண்ட மசோதாவை, 'ஆதார் மசோதா-2016' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா, தந்திரமான வகையில் பண மசோதா என்று வகைப்படுத்தப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பண மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதலே போதுமானது. எனவே, மாநிலங்களவையில் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும், மக்களவையில் பெரும்பான்மை பலம் கொண்ட பா.ஜ.க அரசு, மசோதாவை நிறைவேற்றியது.

ஆதாரால் ஆபத்தா? அது எப்படி?

தனியார் நிறுவனங்கள் ஆதார் தரவுகளை அணுகமுடிவதால் ஆதார் திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான புகார்கள் எழுந்தன. கிரிக்கெட் வீரர் தோனி உட்பட பல பிரபலங்களும் தங்கள் தரவுகள் கசிவதாக போலீசில் புகார் அளித்தனர்.
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India, UIDAI) யு.ஐ.டி.ஏ.ஐக்கு தனிநபர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்க உரிமை உண்டு, ஆனால் தனியார் நிறுவனங்கள் மற்றும் முகவர்களுக்கு இதற்கான உரிமையை எப்படி கொடுக்கமுடியும்?
125 பதிவாளர்கள் மற்றும் 556 பதிவு முகமைகள் மூலம் ஆதார் திட்டத்தை யு.ஐ.டி.ஏ.ஐ நடைமுறைப்படுத்தியது. இந்தியாவில் ஆதார் எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டால்கூட, ஆதார் சட்டம், ஐ.டி சட்டம் மற்றும் 2011ஆம் ஆண்டின் ரகசிய தகவல் தெரிவிப்போரை பாதுகாக்கும் சட்டத் திருத்தங்களின்படி, தனிநபர்களின் அந்தரங்க தகவல்கள் மற்றும் தரவுகளை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம், ஆனால் யு.ஐ.டி.ஏ.ஐ மற்றும் அரசு அதற்கான சட்டபூர்வ பொறுப்பை தட்டிக்கழிக்கின்றன.
தனியார் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை சரிப்பர்க்கும் வசதி தரப்படுவதால், தரவுகள் கசியும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், அரசு ஏன் ஆதார் தகவல்களை ஆஃப்லைன் சரிபார்ப்பிற்கு மட்டுமே உரியது என்று கட்டுபடுத்தக்கூடாது?

ஆதாரின் அவசியமும் அதன் கண்காணிப்பு அமைப்பு

அரசின் நலத்திட்டங்களை தவறாக பயன்படுத்துவதை குறைப்பது, ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான நோக்கத்திற்காகவே ஆதார் எண் திட்டதை அமல்படுத்த அரசு திட்டமிட்டது, ஆனால் அது அனைத்து துறைகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கூறுவதன் அவசியம் என்ன என்ற கேள்வியே பிரதானமானது.
பாஸ்போர்ட், வங்கி கணக்கு (ஜன் தன் கணக்குகளைத் தவிர), ஓட்டுநர் உரிமம், மொபைல் போன்ற பல சேவைகளில் அரசு மானியம் பெற முடியாது. பின்னர் ஏன் ஆதாரில் இவை அனைத்தும் இணைக்கவேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது? அவற்றை சேர்க்க வேண்டும்? இந்த கேள்விக்கான விளக்கத்தை அரசு இதுவரை கொடுக்கவில்லை.
மத்திய அரசின் சமூக ஊடக மையத்தின் முன்மொழிவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பின்னர் ஆதார் கண்காணிப்பு முறைமையை எப்படி நியாயப்படுத்த முடியும்?
போதுமான முன்னேற்பாடுகள் இல்லாமல் அமல்படுத்தியது மற்றும் முரண்பாடுகள்
ஆதார் அட்டை ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஐந்து அடி கனமான சுவர்களுக்குள் பாதுகாப்பாக உள்ளதாக ஆதார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியிருந்தார்.
மறுபுறமோ, 2500 ரூபாயில் கிடைக்கும் கணினி மென்பொருள் மூலம் ஆதார் தகவல்களை பெறமுடியும் என்ற தகவல் வெளியாகி இந்திய மக்களை அதிர்ச்சிக்குளாக்கியது.
யு.ஐ.டி.ஏ.ஐ-இன் இன் 12 இலக்க அடிப்படை எண்ணை ரகசியமாக வைத்திருக்க, 16-இலக்க மெய்நிகர் ஐடி (வி.ஐ.டி) முறை அமல்படுத்தப்படுகிறது.
தனது ஆதார் எண்ணை டிராயின் தலைவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு ஆதார் தகவல் பாதுகாப்பானது என்று சவால் விட்டதும், 'டிஜிட்டல் ஆதார் சண்டை' தொடங்குகிறது.
இந்திய மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கத் தொடங்கியபின், இது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துமா என்ற அச்சங்கள் பரவலாகியுள்ளன.
டிராயின் பரிந்துரை மற்றும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கையின்படி, பொதுமக்களுக்கு தங்களது தரவுகளின் மீது உரிமை இல்லை என்று கூறப்பட்டாலும், ஆதார் தரவுகள் கசிந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று ஆதார் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
முன்மொழியப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஆதார் தரவு பாதுகாப்பு மற்றும் தரவு கசிந்தால் ஏற்படும் சேதங்களுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்புக்கு சட்டரீதியான பொறுப்பு உள்ளது என்ற ஏற்பாட்டை செய்யலாம். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதுபோன்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றி ஆலோசிக்கலாம் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, பரிந்துரை செய்துள்ளது.

#UPSCTAMIL

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN